புதுச்சேரி: நைனார்மண்டபம் தென்னஞ்சாலையில் 500 மீட்டர் தொலைவிற்கு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.முதலியார்பேட்டை தொகுதி நைனார்மண்டபம் தென்னஞ்சாலை வீதியில் பொதுப்பணித் துறை நீர்பாசன கோட்டத்திற்கு உட்பட்ட வாய்க்கால் உள்ளது.இந்த வாய்க்கால் வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் இருந்து சுதானா நகர் வழியாக தேங்காய்திட்டு முகத்துவார வாய்க்கால் வாயிலாக கடலில் கலக்கிறது.இந்த வாய்க்காலில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட சிலாப் மீது 20க்கும் மேற்பட்ட கடைகள் முளைத்தன. அத்துடன் சாலையின் இருபுறமும் கடைக்காரர்கள் பொருட்களை பரப்பினர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது.இது தொடர்பாக சம்பத் எம்.எல்.ஏ., தலைமையில் நேற்று முன்தினம் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.நேற்று முதலியார்பேட்டை போலீசார் மற்றும் நீர்பாசன கோட்ட அதிகாரிகள் முன்னிலையில், தென்னஞ்சாலையில் 500 மீட்டர் தொலைவிற்கு இருந்த கடை, வீடு உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் அகற்றினர்.சாலையை ஆக்கிரமித்து இருந்த படிக்கட்டுகளும் இடிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE