திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவடைந்த நர்ஸ், செவிலியர் தினமான நேற்று இறந்தார். போதிய சிகிச்சை அளிக்கப்படாததே காரணம் என டாக்டர்கள் மீது ஹிந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி முருகலட்சுமி, 36. திருநெல்வேலி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மூன்று ஆண்டாக நர்சாக பணியாற்றினார்.மே 4ல் தலைவலி காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மே 7ல் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். மீண்டும் மயங்கி விழுந்ததால் மே 8ல் அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் மூளைச் சாவடைந்தார்.நான்கு நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்தார் என புகார் எழுந்தது. நேற்று அவர் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.முருகலட்சுமியின் கணவர் சின்னதம்பி, ஹிந்து முன்னணி கழுகுமலை ஒன்றிய துணைத் தலைவராக உள்ளார். எனவே ஹிந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார், மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் ஆகியோர் நேற்று அரசு மருத்துவமனையில் டீன் ரவிச்சந்திரனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.முருகலட்சுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பது குறித்து எம்.ஆர்.ஐ., ஸ்கேனில் தெரிந்தும் டாக்டர்கள் போதிய சிகிச்சை அளிக்கவில்லை. ஸ்கேன் ரிப்போர்ட்டை படிக்காமலேயே அவரை மே 7ல் டிஸ்சார்ஜ் செய்தனர்.அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து இருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க கூடும். மூளைச்சாவு அடைந்த பிறகும், அவரது உடலை தானம் அளிக்க அரசு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை என கூறினர்.எனவே சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். நேற்று அவரது உடலை திரும்பப் பெற மறுத்து விட்டனர். முருகலட்சுமிக்கு, 12 வயது, 15 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE