ஜவுளி உற்பத்தி நிறுவனம்
வரும் 16, 17ல் 'ஸ்டிரைக்'
கரூர், மே 13---
வரும், 16, 17ல், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக, கருர் வீவிங் நிட்டிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் தனபதி தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: வரலாறு காணாத நுால் விலை உயர்வு குறித்து, கடந்த, 8ல், திருப்பூரில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து பிரதான ஜவுளி சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக, மே, 16, 17 தேதிகளில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாநிலம் தழுவிய கடையடைப்பு செய்வது என, தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, கரூரை சார்ந்த அனைத்து ஜவுளி சங்கங்களும், இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் பதிலாக, வரும், 16, 17 தேதிகளில், தங்களின் நிறுவனங்களை அடைத்து, உற்பத்தியை நிறுத்தம் செய்து, கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
சீமை கருவேல மரங்களை
முற்றிலும் அகற்றப்படுமா?
கரூர், மே 13---
அரவக்குறிச்சியிலிருந்து, திருமுக்கூடலுார் வரை அமராவதி ஆறு
செல்கிறது. கரூர் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப்பகுதியில்,
பல்வேறு இடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி
காணப்படுகிறது. குறிப்பாக, சீமை கருவேல மரங்கள் அதிகளவில்
வளர்ந்துள்ளன. இதனால், ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீரை
அதிகளவில் உறிஞ்சுகிறது. தற்போது, ஒரு சில இடங்களில் மட்டும்
சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. அப்படியே அமராவதி ஆறு செல்லும் வழியில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடைமடைக்கு தண்ணீர் பற்றாக்குறை
கால்வாயை துார்வார வலியுறுத்தல்
கரூர், மே 13-
கரூர் அடுத்த, கருப்பம்பாளையம், திருமாநிலையூர் பகுதி
ராஜவாய்க்காலிலிருந்து, பெரிய கால்வாய் பிரிந்து செல்கிறது.
இதன் மூலம், 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
ஆனால், கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள்,
செடி, கொடிகள் வளர்ந்து அடைத்து காணப்படுகிறது. இதனால்,
கடைமடைக்கு தண்ணீர் செல்லாமல், விவசாயம் பாதிக்கப்படுகிறது.
அமராவதி ஆற்றில் தண்ணீர் அதிகம் செல்லும் போதுகூட,
பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, கால்வாயை
துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புலியூர் டாஸ்மாக்கை மூட
பொதுமக்கள் கோரிக்கை
கரூர், மே 13-
கரூர்-திருச்சி மாநில நெடுஞ்சாலை, புலியூரில் டாஸ்மாக்
செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில்
கடை திறப்பால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதன் அருகே, புலியூர் பஞ்சாயத்து அலுவலகம், மருத்துவமனை ஆகியவை
செயல்பட்டு வருகின்றன. கடையின் பின்புறத்தில் ஏராளமான
குடியிருப்புகள் அமைந்துள்ளன. லாரிகளை நிறுத்தி விட்டு மது
அருந்த சென்று விடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பெண்கள், இரவில் நடமாட முடியாது. டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட
நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக செவிலியர் தினம்
உறுதிமொழி ஏற்பு
குளித்தலை, மே 13-
குளித்தலை அரசு மருத்துவமனையில், 'உலக செவிலியர் தினம்' கொண்டாடப்பட்டது. மருத்துவமனை அலுவலர் பூமிநாதன் தலைமை வகித்தார். டாக்டர்கள் சுதர்சன ஏசுதாஸ், சண்முகப்பிரியா, யாஸ்மின் பர்வீன், மஞ்சு, கன்னியாகுமரி, மரகதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக செவிலியர் தினத்தையொட்டி, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். அனைத்து செவிலியர்களுக்கும் ஊக்கப்படுத்தும் விதமாக, நினைவு பரிசு வழங்கப்பட்டது. மருத்துவமனை அலுவலர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில்
போலி டாக்டர் அதிகரிப்பு
கரூர், மே 13---
கரூர் மாவட்டத்தில், குளித்தலை, தோகைமலை, கடவூர், கிருஷ்ணராயபுரம், க.பரமத்தி ஆகிய ஒன்றியங்களில் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அந்த மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு, குறைந்த செலவில் போலி டாக்டர்கள் ஊசி போட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்குகின்றனர். இதில், சிலருக்கு காய்ச்சல் குணமாகும் போது, அதிகளவில் அங்கு சென்று சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
குறிப்பாக கிராமப்புறங்களில், வீடு வீடாக சென்று சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்களால், சிறிய அளவிலான உடல் உபாதைகள் சரி செய்யப்பட்டாலும், தவறான மருந்து மாத்திரைகளால், பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, போலி டாக்டர்களை அடையாளம் கண்டு, களையெடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணிடம் செயின் பறிப்பு
கரூர், மே 13---
டூவீலரில் சென்ற பெண்ணிடம், தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். கரூர் அருகே, வெண்ணைமலை நவல் நகரை சேர்ந்தவர் ஷாலினி, 23. இவர், வீட்டின் அருகே, அவரது சகோதரியுடன், நேற்று முன்தினம், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இவர்களை, பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், ஷாலினி கழுத்தில் இருந்த, மூன்றரை பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு, தப்பி சென்றனர்.
இதுகுறித்து, வாங்கல் போலீசில் அளிக்கப்பட்ட புகார்படி, அப்பகுதி, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
மினி மாரத்தான் போட்டி
மாணவருக்கு பாராட்டு
கரூர், மே 13---
மாவட்ட அளவில் நடந்த, மினி மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்த கரூர் அரசு கலைக்கல்லுாரி மாணவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
கரூர் அருகே, புலியூரில், மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான, மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில், மாவட்ட அளவில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் கரூர் அரசு கலைக்கல்லுாரியில், பி.எஸ்சி., விலங்கியியல் மூன்றாமாண்டு மாணவர் தினேஷ்குமார் பங்கேற்று முதலிடம் பிடித்தார். சிறப்பிடம் பிடித்த மாணவர் தினேஷ்குமாரை,
கல்லுாரி முதல்வர் கவுல்சல்யாதேவி, உடற்கல்விதுறை இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
வேகத்தடை இல்லை
அடிக்கடி விபத்து
அரவக்குறிச்சி, மே 13-
பள்ளப்பட்டி, ஷா நகர் பகுதியில், திண்டுக்கல் செல்லும் சாலை திருப்பத்தில் வேகத்தடை இல்லாததால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இவ்வழித்தடத்தில், நாள்தோறும் ஏராளமான பஸ் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. அதேசமயம், நகரின் உட்பகுதியிலிருந்து வரும் வாகனங்களுக்கு, எதிர் திசையிலிருந்து வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி மோதி விபத்துக்குள்ளாகின்றன. எனவே, விபத்தை தவிர்க்க, வேகத்தடை அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழிப்பறி, திருட்டு அதிகரிப்பு
அரவக்குறிச்சி மக்கள் அச்சம்
அரவக்குறிச்சி, மே 13-
அரவக்குறிச்சி பகுதியில், வழிப்பறி, திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில், தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து தொடர் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். சாலையில் செல்லும் முதியவர்கள், தனியாக செல்லும் பெண்களை பின்தொடரும் மர்ம நபர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வழிமறித்து, ஆயுதங்களை காட்டி மிரட்டி, பணம், நகை, செல்போன் போன்ற விலை உயர்ந்த பொருட்களை பறித்து செல்கின்றனர். மேலும், வியாபாரிகள் போல் நடித்து, யாரும் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு, இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபடுகின்றனர்.
எனவே, அரவக்குறிச்சியில் சந்தேக நபர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE