காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம், நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில், 44வது திவ்யதேசமாக திகழ்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 10 நாட்கள் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறும்.கடந்த 2020 -- 21 என இரு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், வைகாசி பிரம்மோற்சவ விழா நடக்கவில்லை.
இந்தாண்டு வைகாசி பிரம்மோற்சவம் நேற்று அதிகாலை, 4:15 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.தொடர்ந்து, உபய நாச்சியாருடன், தங்க சப்பரத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆழ்வார் பிரகாரம் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடந்து வீதியுலா சென்றார்.
பிரம்மோற்சவ கொடியேற்றத்தையொட்டி, கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.மாலை, சிம்ம வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா சென்றார். இரண்டாம் நாள் உற்சவமான இன்று காலை, ஹம்ஸ வாகனத்திலும், மாலை, சூரிய பிரபையிலும் பெருமாள் வீதியுலா செல்கிறார்.
மூன்றாம் நாள், பிரபல உற்சவமான கருட சேவை உற்சவம் நாளை அதிகாலை 4:00 மணிக்கு நடைபெறுகிறது. 5:00 மணிக்கு கோபுர தரிசனம் நடைபெறுகிறது. ஏழாம் நாள் உற்சவமான, வரும் 19ல் காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE