நிதிஷுக்கு பாடம் புகட்டுவோம்!
'வேண்டும் என்றே வதந்தியை கசிய விட்டு வேடிக்கை பார்க்கிறார்...' என்று பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் மீது கடும் கோபத்தில் உள்ளனர், அந்த மாநில பா.ஜ.,வினர்.பீஹாரில், 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமாரின் கட்சி குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கூட்டணி கட்சியான பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது.கூட்டணி தர்மப்படி, நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுத் தந்தது, பா.ஜ., மேலிடம். சமீப காலமாகவே, பா.ஜ.,வுக்கும், ஐக்கிய ஜனதா தளத்துக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.
முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமாரை கழற்றி விட, பா.ஜ., தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதனால், கடுப்பான ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர், 'நாங்கள் மீண்டும் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைப்போம். பா.ஜ., தயவு எங்களுக்கு தேவையில்லை...' என்று கோபமாக கூறி வருகின்றனர்.
சமீபத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை, நிதிஷ் குமார் சந்தித்ததும் இந்த பரபரப்பை அதிகரித்தது. பா.ஜ.,வினரோ, 'இந்த பிரச்னைக்கு காரணமே நிதிஷ் குமார் தான். ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் நெருக்கமாக இருப்பதாக காட்டுவதன்
வாயிலாக, பா.ஜ.,வை மிரட்ட நினைக்கிறார். இந்த விவகாரத்தில் வதந்தியை கிளப்பி விடுவதே, நிதிஷ் குமார் தான். விரைவில், அவருக்கு பாடம் புகட்டுவோம்...' என ஆவேசப்படுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE