சூலூர்:மாநில நெடுஞ்சாலையை ஒட்டி கொட்டப்பட்ட, பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் பறப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சூலூர் அடுத்த நீலம்பூரில் இருந்து, கோவை நோக்கி அவிநாசி ரோடு செல்கிறது. இந்த ரோட்டின் வடக்குப்பகுதியில் பழைய பெட்ரோல் பங்க் அருகிலும், தெற்கு பகுதியில் சுடுகாட்டை ஒட்டியும் குப்பை கொட்டப்படுகிறது. குப்பையை கொட்டாதீர் என, ஊராட்சி நிர்வாகம் சார்பில் , அறிவிப்பு பலகை வைத்தும் எந்த பயனும் இல்லை.சில நாட்களுக்கு முன், ஊராட்சியின் தூய்மை பணியாளர்கள் அந்த இடங்களை சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் தூவி சென்றனர்.இந்நிலையில், அந்த இடத்தில் நேற்று முன் தினம் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கவர்கள் கொட்டப்பட்டுள்ளது. அந்த பிளாஸ்டிக்கழிவுகள் காற்றில் பறப்பதால், ரோட்டில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதுகுறித்து மக்கள் கூறுகையில்,' எத்தனை முறை சுத்தம் செய்தாலும், இரவு நேரத்தில் வாகனத்தில் வந்து குவியல், குவியலாக கழிவுகளை கொட்டி விடுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. துர்நாற்றம் வீசுகிறது. அந்த இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குப்பை கொட்டுவோரை பிடித்து ஊராட்சி நிர்வாகம் தண்டிக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE