கோவை:'நுால் விலையை கட்டுக்குள் கொண்டு வர, முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும்' என, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணி வலியுறுத்தியுள்ளார்.அபரிமிதமாக உயர்ந்து வரும் பருத்தி மற்றும் நுால் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கொங்கு மண்டல ஜவுளித்துறையினர், 16, 17ல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கின்றனர்.சமீபத்தில் கோவை வந்திருந்த, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தொழில்துறை பிரதிநிதிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணி கூறியதாவது:ஜவுளித் தொழிலுக்கு மூலாதாரமான நுால் விலையை கட்டுப்படுத்துவது முக்கியம். விலையை கட்டுப்படுத்த பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இந்திய பருத்தி கழகம் வாயிலாக பருத்தியை கொள்முதல் செய்து, இடைத்தரகர்கள் மற்றும் வணிகர்களுக்கு கொடுக்காமல், மில்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும்.இதனால், பருத்தியை பதுக்கி வைத்திருப்பவர்களால் செயற்கையாக விலை ஏற்றம் ஏற்படாது. நுால் உற்பத்தியாளர், உபயோகிப்பாளர், அரசு தரப்பு பிரதிநிதி என, முத்தரப்பினர் கொண்ட நுால் விலை நிர்ணய குழு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE