கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலை நிலையை தவிர்க்க கிராமங்கள் தோறும் மனோதத்துவ, உளவியல் பயிற்சி அவசியம் என்ற நிலை உருவாகி உள்ளது.
மாவட்டத்தில் குடும்ப சூழல் ,மதுபோதை போன்ற பிரச்னைகளால் விஷம் குடிப்பது, துாக்கிட்டு கொள்வது உள்ளிட்ட தற்கொலைகளில் அதிகம் ஈடுபடுகின்றனர்.இதற்கு முக்கிய காரணமாக அமைவது மது போதை என சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டுகின்றனர். ஆட்சி மாறிய போதும் காட்சிகள் மாறாமல் மதுவிற்பனை ஜோராக நடக்கிறது. ஆண்டுதோறும் மது விற்பனை சாதனை படைக்கிறது.
மது போதையின் பிடியில் சிக்கி குடும்பங்கள் பாழாகின்றன. ஆண், பெண் என இருபாலரும் சகிப்புத்தன்மை இன்றி சிறு விஷயங்களுக்கு கூட தற்கொலை எண்ணங்களை உருவாக்கி உயிரை மாய்த்து கொள்கின்றனர். இச்சூழல் அனைவரிடத்திலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை தற்போதைய இணைய விளையாட்டுகளின் மூலம் கண்டிப்பு ஏற்படுத்தும் நிலையில் கூட இதுபோன்ற விபரீதங்கள் தொடர்கிறது . இதற்கு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் தோறும் சுகாதாரத்துறை, மாவட்ட அரசு மருத்துவ நிர்வாகம் உளவியல் பயிற்சி அளிப்பது அவசியம் என்ற சூழல் உருவாகி உள்ளது.
இளைஞர்கள் சிலரின் தவறான முடிவால் இளம் வயதிலே பெண்கள் விதவைகள் ஆகின்றனர். இதை தவிர்க்க போதிய விழிப்புணர்வு அவசியமாகிறது . ..............
நல் வழிபடுத்துங்க
அதிகரித்துவரும் தற்கொலைகள் கவலையளிக்கிறது. இதை தவிர்க்க கிராமங்கள்தோறும் மருத்துவத்துறை , உளவியல் பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இளைய சமுதாயத்தை நல் வழிபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனமுருகன், சமூக ஆர்வலர், மன்னவனுார் ....................
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE