புதுச்சேரி-பூமியான்பேட்டையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பால்கனி இடிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது.பூமியான்பேட்டை பாவாணர் நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. கடந்த 25 ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் மொத்தம் 32 குடும்பங்கள் வசித்து வருகின்றன. போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால், வீட்டின் பால்கனி சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதுகுறித்து குடியிருப்புவாசிகளும், தொகுதி எம்.எல்.ஏ.,வும், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டு, பால்கனியை சீரமைத்து தர வலியுறுத்தி வந்தனர்.குடியிருப்பை பார்வையிட்ட குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், சேதமடைந்த பால்கனியை சீரமைக்க டெண்டர் விட்டனர். ஆனால், டெண்டர் எடுக்க காண்ட்ராக்டர்கள் யாரும் முன்வரவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில் குடிசை மாற்று வாரிய வீட்டின் பால்கனியில் நீர் தேங்கி, நேற்று காலை 7:00 மணி அளவில் இடிந்து விழுந்தது. அப்போது, அங்கு யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும், அங்கிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன. தகவலறிந்த சிவசங்கரன் எம்.எல்.ஏ., மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, இடிந்து விழுந்த பால்கனியை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE