கோவையில் 9 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலமாக காஸ் விநியோகிக்கும் திட்டத்தின் முக்கிய அம்சமாக, இயற்கை எரிவாயுவை இருப்பு வைக்கும் 'சிட்டி கேட் ஸ்டேஷன்' கட்டுமானப் பணி முடிவு பெற்று திறக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 783 வீடுகளுக்கு, குழாய் மூலமாக காஸ் விநியோகிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம், இந்த பணியை மேற்கொள்கிறது. இதற்காக, கோவை மாவட்டத்தில், 230 கி.மீ.,க்கு இரும்புக்குழாய்கள் பதிக்கும் பணியை இந்நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது. இதுவரை 65 கி.மீ.,க்கு பணி முடிவடைந்துள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் குறிச்சி மற்றும் மலுமிச்சம்பட்டி பகுதிகளில், வீடுகளுக்கு குழாய் மூலமாக காஸ் விநியோகிக்கும் திட்டம் துவங்குமென்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்இவற்றைத் தவிர்த்து, மாவட்டத்தில் வாகன எரிவாயு விநியோகிப்பதற்கு 273 சி.என்.ஜி., ஸ்டேஷன்களைத் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை 10 ஸ்டேஷன்கள் துவக்கப்பட்டுள்ளன.இருப்பு மையம் திறப்பு இவை அனைத்துக்குமான இயற்கை எரிவாயுவை இருப்பு வைக்கும் மையமான 'சிட்டி கேட் ஸ்டேஷன்' மற்றும் 'மதர் ஸ்டேஷன்', கோவை, பிச்சனுாரில் கட்டப்பட்டுள்ளது.
இந்த மையம், ஒரு மணி நேரத்துக்கு 13 ஆயிரம் க்யூபிக் மீட்டர் எரிவாயு கையாளும் திறன் கொண்டது. வரும் 2025 வரையிலான கோவையின் இயற்கை எரிவாயு தேவையை இது பூர்த்தி செய்யும். இந்த மையத்துக்கு கொச்சி முனையத்தில் இருந்து இயற்கை எரிவாயு கொண்டு வரப்படுகிறது. பிச்சனுாரில் அமைந்துள்ள 'சிட்டி கேட் ஸ்டேஷன்' இயற்கை எரிவாயு இருப்பு மையத்தை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குனர் (பைப்லைன்ஸ்) நானாவேர் திறந்து வைத்தார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கோவை மேலாளர் சுரேஷ் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு, இயற்கை எரிவாயு தங்கு தடையின்றி கிடைப்பதற்கு, இந்த இருப்பு மையம் உதவும். அடுத்த ஆண்டுக்குள் கோவையில் 41 இயற்கை எரிவாயு விநியோக மையங்கள் துவக்கப்படும். வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு பரவலாக கிடைக்கவும், விலையை மேலும் குறைக்கவும், கூடுதலாக ஆன்லைன் சி.என்.ஜி., ஸ்டேஷன்கள் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.
கோவையில் வீடுகளுக்கு குழாய் மூலமாக காஸ் வினியோகிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது, காஸ் விலை குறையும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர். கோவையில் தற்போது எரிவாயு இருப்பு மையம் (சிட்டி கேட் ஸ்டேஷன்) திறக்கப்பட்டுள்ள நிலையில், இயற்கை எரிவாயுவின் விலை ஐந்து ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதை (ஒரு கிலோ ரூ.79.17) சுட்டிக்காட்டுகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE