சென்னை:'அரசு பள்ளி ஆசிரியர்கள் வரும் 20ம் தேதி வரை பணிக்கு வர வேண்டும்; அதன் பின் விடுமுறை எடுக்கலாம்' என, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை விடப்படுகிறது. அதேநேரம், ஆசிரியர்கள் வரும் 20ம் தேதி வரை பணியில் இருக்க வேண்டும். மாணவர்களுக்கான தேர்வு தாள்களை மதிப்பீடு செய்து, அவர்களுக்கு ஆண்டு செயல்திறன் மற்றும் அடுத்த வகுப்புக்கு முன்னேற்றத்துக்கான பட்டியல் தயாரிக்க வேண்டும்.
இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மாணவர்களின் வருகை பதிவேட்டில் இடம் பெற்ற தகவல்களும், 'எமிஸ்' மேலாண்மை தளத்தில் உள்ள தகவல்களும் சரியாக உள்ளதா என ஆய்வு செய்து, அதில் தவறுகள் இருந்தால், எமிஸ் தளத்தில் உரிய பதிவு செய்ய வேண்டும். இந்த பணிகள் கட்டாயம். இந்த பணிகளை முன் கூட்டியே ஆசிரியர்கள் முடித்தால், 20ம் தேதிக்கு முன்பே கூட கோடை விடுமுறை எடுத்து கொள்ளலாம். வெளிநாடு செல்ல தடையில்லா சான்றிதழ் பெற்ற ஆசிரியர்களும், விரைந்து இந்த பணிகளை முடித்து, விடுமுறை எடுத்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE