சண்டிகர்:மூத்த தலைவர் சுனில் ஜாக்கர், 68, காங்கிரஸ் கட்சியில் இருந்துவிலகினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான சுனில் ஜாக்கர், பஞ்சாபில் மூன்று முறை எம்.எல்.ஏ.,வாகவும், மூன்று முறை லோக்சபா எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார். கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருந்துள்ளார்.லோக்சபா முன்னாள் சபாநாயகர் பல்ராம் ஜாக்கரின் மகனான சுனில் ஜாக்கர் குடும்பத்துக்கு, பஞ்சாபில் நல்ல செல்வாக்கு உள்ளது.
கடந்தாண்டு, இம்மாநிலத்தில் கட்சியிலும், அரசிலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. அப்போது முதல்வர் பதவி சுனில் ஜாக்கருக்கு கிடைக்கலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருடைய பெயரை, கட்சித் தலைமை பரிசீலிக்கவில்லை.
இதற்கிடையே, பஞ்சாப் சட்டசபைக்கு இந்தாண்டு நடந்த தேர்தலின்போது, இவர் ஓரம் கட்டப்பட்டார். கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். மேலும், விளக்க நோட்டீசும் அவருக்கு அனுப்பப்பட்டது.இந்நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக சுனில் ஜாக்கர் நேற்று அறிவித்தார். சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'காங்கிரஸ் கட்சிக்கு குட் பை' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், பா.ஜ.,வில் இணைந்துள்ளனர். கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட மோதலால், சுனில் ஜாக்கர் எந்த நேரத்திலும் விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இவருக்கு முன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, அஸ்வனி குமார், ஜிதின் பிரசாதா, ஆர்.பி.என்.சிங் போன்றோர் விலகினர். இவர்களைத் தவிர மூத்த தலைவர்கள் பி.சி.சாக்கோ, அமரீந்தர் சிங் என, பலரும் விலகினர். அந்த வரிசையில், சுனில் ஜாக்கரும் இணைந்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE