புதுடில்லி:வாரிசு அரசியல், ஊழல், தெளிவான கொள்கையின்மை போன்றவற்றால், 10 ஆண்டுகள் வீணாகி விட்டதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கான கொள்கை அறிவிப்பை பிரதமர் மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வெளியிட்டு நேற்று முன்தினம் பேசியதாவது:இந்தியர்களுக்கு புதுமை செய்வதில் எப்போதும் ஆர்வம் அதிகம். இதை நாம் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் போது பார்த்தோம். அத்தகைய ஆர்வத்தை செயல்படுத்துவதற்கான சூழலையும், வழிகாட்டுதலையும் நாம் தந்திருக்க வேண்டும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக முந்தைய ஆட்சியாளர்கள் அதை செய்யவில்லை. வாரிசு அரசியல் செய்ததாலும், தெளிவான கொள்கையில்லாமல் செயல்பட்டதாலும், ஏராளமான ஊழல்கள் காரணமாகவும், 10 ஆண்டுகள் வீணாகி விட்டன.இதனால் ஒரு தலைமுறையினரின் கனவுகள் கலைந்து போயின. இந்நிலையில் தான், 2014ல் மத்தியில் அமைந்த பா.ஜ., அரசு, இந்திய இளைஞர்களின் புதுமை தாகத்திற்கு வடிகால் ஏற்படுத்தி தந்தது. தொழில் நடைமுறைகளை எளிதாக்கி, கட்டமைப்பு துறையில் முதலீடு களை அதிகரித்தது. மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மூலம், எட்டு ஆண்டுகளுக்குள் ஸ்டார்ட் அப் துறை மிகப் பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
- பிரதமர் மோடி
இந்தியாவில், 2014க்கு முன், 300 - 400 ஆக இருந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் எண்ணிக்கை இன்று, 70 ஆயிரத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. அதுவும், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50 சதவீத நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 7ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை எட்டி 'யூனிகார்ன்' அந்தஸ்தை வாரம் ஒரு நிறுவனம் பெற்று வருகிறது. உலகளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE