அவிநாசி:அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேர்த்திருவிழாவில் அம்மன் தேரை ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர்.அவிநாசி கோவிலில் நடந்து வரும் சித்திரை தேர்த்திருவிழாவில், நேற்று ஸ்ரீ கருணாம்பிகை அம்மன், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் தேரோட்டம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர்.நான்கு ரத வீதிகளில், குழந்தை நடைபயில்வது போன்று அசைந்தாடி வந்த அம்மன் தேர், மதியம், 2:00 மணிக்கு நிலை சேர்ந்தது. அம்மன் தேருக்கு பின், பரிவார மூர்த்திகள் தேர்களை, சிறுவர், சிறுமியர் வடம் பிடித்து இழுத்தனர்.
உற்சாகத்தில்சிறுவர், சிறுமியர்
ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் திருத்தேர் சிறியவை என்பதால், ஆண்டுதோறும் இதனை இழுப்பதில், சிறுவர் சிறுமியர் ஆர்வம் காட்டுவர். நேற்றும் கூட, 250 சிறுவர், சிறுமியர் தேர்களை வடம் இழுத்து, 'முருகனுக்கு அரோகரா' என கோஷம் எழுப்பினர்.சிறுவர்களின் உற்சாகத்தை பார்த்து, பல பக்தர்கள் ஐஸ்கிரீம், பிஸ்கட், கடலை மிட்டாய் உட்பட ஏராளமான தின்பண்டங்களை வாங்கி கொடுத்து திக்குமுக்காட வைத்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வடம் இழுத்ததை பார்த்த, பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE