சென்னை:துணை கலெக்டர் அந்தஸ்தில் வரக்கூடிய பதவிகளை அடையாளம் காண, குழு அமைக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குரூப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில், உதவி இயக்குனர் மற்றும் இணை இயக்குனராக பதவி வகிக்கும் 98 பேர் தாக்கல் செய்த மனு:மாநில சிவில் சர்வீசஸ் பணியில் எங்களை சேர்க்காததால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக வர முடியவில்லை.
காத்திருப்பு
அதனால், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர் பதவிகளை, சிவில் சர்வீசஸ் பணியில் சேர்க்க, அரசிடம் கோரினோம். எங்கள் கோரிக்கையை, அரசு நிராகரித்து விட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, சிவில் சர்வீசஸ் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி கோவிந்தராஜ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் எம்.ரவி ஆஜரானார்.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:துணை கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி ஆகிய பதவிகளுக்கான வரையறைக்குள், மனுதாரர்கள் வராததால், அவர்களை ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நியமிக்க பரிசீலிக்கப் பட வில்லை. கூடுதல் சம்பளம், பொறுப்பு, கடமை உள்ள மனுதாரர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக வருவதற்கு, 20 முதல் 30 ஆண்டுகள் வரை, காத்திருக்க வேண்டியுள்ளது.
பரிந்துரை
அதேநேரத்தில், குறைந்த கல்வி தகுதி உடையவர்கள், சாதாரண பணிகளில், வருவாய் துறையில் நியமிக்கப்படுகின்றனர். சிவில் சர்வீசஸ் பணியில் சேர்க்கப்பட்டு, 10 ஆண்டுகளில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக ஆகின்றனர்.எனவே, தமிழக ஆட்சிப் பணி குறித்து, அரசு பரிசீலிக்க வேண்டும். மாநில அதிகாரிகளை ஒரே மாதிரியாக கருதி, சம வாய்ப்பு வழங்கி, நிர்வாக பணியில் கொண்டு வர, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE