திருக்கோஷ்டியூர்:திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு, தங்கத்தகடு பதிக்கும் திருப்பணியை முன்னிட்டு, லட்சுமி நரசிம்மர் சிலையில் தங்கத்தகடு பதிக்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா நேற்று துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், திருகோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோவிலுக்கு, நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா வந்தார்.கோவில் மற்றும் ராணி மதுராந்தகி நாச்சியார் சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.
தேரில் எழுந்தருளிய உற்சவ பெருமாளை அவர் தரிசித்தார். அங்கு முதல்வர், அவரது குடும்பத்தினரின் பெயருக்கு பட்டாச்சாரியார்கள் அர்ச்சனை செய்தனர்.தேரின் மேலே உற்சவரை வலம் வந்த அவர், பின்னர் கோவிலுக்கு சென்று, லட்சுமிநரசிம்மருக்கு தங்கத்தகடு பதிக்கும் பணியை துவக்கி வைத்தார்.
பின்னர், சயன கோலத்திலுள்ள மூலவர், தாயார், ஆண்டாள், ராமானுஜர், திருக்கோஷ்டியூர் நம்பிகள் சன்னதிகளுக்கு சென்று தரிசித்தார். துர்காவுடன் அவரது சகோதரி, பெண் உதவியாளர் வந்திருந்தனர். ஒரு மணி நேரம் கோவிலில் இருந்தனர்.அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மல்லாக்கோட்டை, பட்டமங்கலம், நாட்டார், திருப்பணிக்குழுவினர் உடனிருந்தனர். தொடர்ந்து 16 ஆண்டுகளாக நடக்கும் இந்த திருப்பணி, வரும் தை மாதம் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE