பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே தேர்தல் முன்விரோதத்தில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஊராட்சி தலைவியை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த எடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 75; ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர். இவரது மூத்த மருமகள் கோமளவள்ளி இரண்டு ஆண்டுகளுக்கு முன், நடந்த தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
எதிர்த்து போட்டியிட்ட அதே பகுதியைச் சேர்ந்த விஷ்ணு மனைவி மணிமேகலை வெற்றி பெற்றார். இருதரப்பினருக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்தது.கடந்த 12ம் தேதி பெரியசாமியை ஊராட்சி தலைவி மணிமேகலை, இவரது கணவர் விஷ்ணு, 28; மாமனார் கலியன், 56 உட்பட ஏழு பேர் கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.காயமடைந்த பெரியசாமியின் இளைய மகன் கோபி, மனைவி சங்கீதா ஆகியோர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விஷ்ணு, அவரது தந்தை கலியன், சகோதரர் அஜய்குமார், ஊராட்சி தலைவி மணிமேகலை, உறவினர் சுப்ரமணியன், விஷ்ணுவின் வடமாநில உறவினர்கள் இருவர் உட்பட ஏழு பேர் மீது பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.விஷ்ணு, அவரது தந்தை கலியன் ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஊராட்சி தலைவி மணிமேகலை உட்பட ஐவரை தேடி வருகின்றனர்.
அவர்களை கைது செய்யக் கோரி பெரியசாமியின் உறவினர்கள் விருத்தாசலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், விளாங்காட்டூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று பகல் 12:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தையில் நடத்தி, இரண்டு நாட்களில் கைது செய்வதாக உறுதியளித்தனர். அதையேற்று, பகல் 1:00 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் விருத்தாசலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
ஒருவர் கைது
இதனிடையே பெரியசாமி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார்தேடி வந்த நிலையில், பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் அருகே தலைமறைவாக இருந்த ஊராட்சி தலைவியின் கொழுந்தனார் அஜய்குமார், 25, என்பவரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE