புதுச்சேரி : சோலை நகர் கடற்கரையில் மீனவர் இறந்த சம்பவம் கொலை வழக்காக மாற்றி, விசாரணை நடந்து வருகிறது.முத்தியால்பேட்டை, சோலை நகர் வடக்கு பகுதி சிங்காரவேலர் தெருவை சேர்ந்தவர் கலையரசன், 41; மீனவர். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றார். அதிகாலையில் கடற்கரையில் முகம், கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்தார்.
பிரேத பரிசோதனையில், கழுத்து எலும்பு முறிந்து கலையரசன் இறந்தது தெரிந்தது. படகு கவிழ்ந்து கலையரசன் இறந்ததாக போலீசார் விசாரணையை முடித்தனர்.இந்நிலையில், ஏப்ரல் 8ம் தேதி சோலை நகரில் வசித்த மரக்காணம் நொச்சிக்குப்பம் அபினேஷ், 22; கோட்டகுப்பத்தில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைதான முத்தியால்பேட்டை சதீஷ் உள்ளிட்டோர், கலையரசனை அபினேஷ் கொலை செய்து கடலில் வீசியதால், பழிக்கு பழியாக கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். இது முத்தியால்பேட்டை போலீசாருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.அதனால், கலையரசன் கொலை செய்யப்பட்டாரா என்பதை உறுதி செய்ய, அபினேஷ் கொலையில் சிக்கிய சதீஷ் உள்ளிட்டோரை பிடித்து விசாரணை நடத்தினர். அபினேஷ் நண்பர்கள் தமிழ், சசி ஆகியோரிடமும் விசாரித்தனர்.இதற்கிடையே, கலையரசன் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து சந்தேக மரணம் என பதிந்ததை, கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE