வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியத்தில் உள்ள வெங்கத்துார் ஏரியின் மொத்த நீர்பிடிப்பு பகுதியில், 50 சதவீதம் ஆக்கிரமிப்பில் பிடியில் சிக்கி உள்ள நிலையில், ஏரியை ஆய்வு செய்து சீரமைக்க இருப்பதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இது, வெங்கத்துார் ஊராட்சி மக்கள் மற்றும் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சியில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது 300 ஏக்கர் பரப்பு கொண்ட வெங்கத்துார் ஏரி. இந்த ஏரியில், ஐந்து மதகுகள், ஒரு கலங்கல் என, 300 ஏக்கர் பரப்பு கொண்ட ஏரியை நம்பி, 500 ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த ஏரிக்கு, அதிகத்துார் ஏரி உபரி நீர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் மழை நீரால் நிரம்பும் வெங்கத்துார் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர், கூவம் ஆற்றிற்கு சென்று, செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது.இந்த ஏரிக்கு வரும் நீர் வரத்து கால்வாய்கள், பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளதால், நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஏரியில் நீர் பிடிப்பு பகுதியிலும், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, 150 ஏக்கர் பரப்பு பகுதிகளில் குடியிருப்புகளாகவும், விவசாய நிலங்களாகவும் மாறியுள்ளது.இதுகுறித்து, இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்கள், தமிழக முதல்வர் உட்பட துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் வெங்கத்துார் ஏரியை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வெங்கத்துார் ஏரியில் பெருமளவு நீர் பிடிப்பு பகுதி, குடியிருப்பு பகுதிகளாக மாறி உள்ளது. மேலும், இந்த ஏரியானது மேற்பகுதியில் அமைந்துள்ள அதிகத்துார் ஏரியின் உபரி நீர் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து பெறப்படும் மழை நீரினால் நிரம்புகிறது.மேற்படி ஏரியில் நீர்பரப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அவைகளை அகற்றவும், எல்லை கற்களை நடவும், திருவள்ளூர் வட்டாட்சியருக்கு, நில அளவை செய்ய வேண்டி, இத்துறையின் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
வருவாய் துறையின் மூலம், நில அளவை பணிகள் முடிந்து, எல்லை நிர்ணயம் செய்யப்பட்டவுடன், அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளும், வருவாய் துறையோடு இணைந்து, அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தெரிவித்தார்.மேலும், கூவம் ஆற்றின் குறுக்கே, அதிகத்துார் எல்லையில், புதிய தடுப்பணை அமைக்க, தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் அரசாணை பெறப்பட்டவுடன், தடுப்பணை அமைக்கும் பணிகள் துவங்கி முடிவுறும்போது, வெங்கத்துார், அதிகத்துார் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும்.தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள
சென்னை பெருநகர மேலாண்மைக் குழு மூலம் வெங்கத்துார் ஏரியை துார்வாரி ஆழப்படுத்தால், கரைகள் பலப்படுத்துதல், வரவுக் கால்வாய் மற்றும் மிகை நீர் கால்வாய் சீரமைத்தல் மற்றும் இதர பணிகளை மேற்கொள்ளவும், அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.மேலும், வெங்கத்துார் ஏரியில் கழிவு நீர் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE