தமிழக காங்கிரசில், ராஜ்யசபா எம்.பி., பதவியை புதுமுகத்திற்கு வழங்க ராகுலும், சிதம்பரத்திற்கு வழங்க சோனியாவும் விரும்புவதால், யாரை தேர்வு செய்வது என்பதில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இதனால், கோஷ்டி தலைவர்கள், அப்பதவியை கைப்பற்ற டில்லியில் முகாமிட்டு, காய் நகர்த்தி வருகின்றனர்.
ராஜ்யசபா தேர்தல் ஜூன் 10ல் நடக்க உள்ளது. வரும் 23ம் தேதிக்குள் தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை, டில்லி மேலிடம் அறிவிக்க வேண்டும். காங்., தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல் ஆகிய இருவரின் நேரடி கண்காணிப்பில், அப்பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில் ஒரு இடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு இடத்தை கைப்பற்ற அக்கட்சியின் கோஷ்டி தலைவர்களிடம் குஸ்தி துவங்கி விட்டது. ராஜஸ்தானில் நடந்த காங்கிரஸ் சிந்தனையாளர் மாநாட்டில், தமிழக காங்., சார்பில் 16 பேர் பங்கேற்றனர். மாநாடு முடிந்ததும், சிதம்பரம் உள்ளிட்ட கோஷ்டி தலைவர்களில் சிலர் டில்லிக்கு சென்று முகாமிட்டுள்ளனர்.

ராஜ்யசபா எம்.பி., பதவியை புதுமுகத்திற்கு வழங்க ராகுல் முடிவு செய்துள்ளார். ஆனால், சிதம்பரத்திற்கு வழங்க சோனியா விரும்புகிறார். ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற தீர்மானத்தை, சிந்தனையாளர் மாநாட்டில் நிறைவேற்றி உள்ளதால், கார்த்தி சிதம்பரம் எம்.பி.,யாக இருப்பதால், சிதம்பரத்திற்கு பதவி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், 'டில்லியில் முகாமிட்டாலும், தனி விமானத்தில் பறந்து வந்தாலும், அவர்களுக்கு முன்னுரிமை கிடையாது; உழைத்தவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும்' என, ராகுல் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் யார் கட்சிக்காக உழைத்தனர் என்ற அறிக்கையை, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம், ராகுல் கேட்டுள்ளார்.
அவர் அளிக்கும் அறிக்கையை தொடர்ந்து, இறுதியாக வேட்பாளர் யார் என்பதை சோனியா, ராகுல் முடிவு செய்து, அறிவிக்க உள்ளனர். அவர்களின் அறிவிப்பு பட்டியலில் சிதம்பரம் இடம் பெறுவாரா அல்லது புதுமுகத்திற்கு வாய்ப்பா என்ற கேள்வி அக்கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE