வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்,-கேரளாவில் திருவனந்தபுரத்தில் பெண் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 26ல் துவக்கி வைக்கிறார்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. நாட்டின் ௭௫வது சுதந்திர ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, திருவனந்தபுரத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில், பெண் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது.

இதை, 26ம் தேதி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துவக்கி வைக்கிறார். இரண்டு நாள் நடக்கும் இந்த மாநாட்டில், நாடு முழுதும் உள்ள பெண் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் பங்கேற்கின்றனர். இவர்களுடன் மத்திய - மாநிலங்களின் பெண் அமைச்சர்கள், பெண் சபாநாயகர்கள், பெண் துணை சபாநாயகர்கள் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் அரசியல் சட்டம் மற்றும் பெண் உரிமைகள் என்ற தலைப்பில் குஜராத் சட்டசபை சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யா, லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார், மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.பி., பிருந்தா காரத், தி.மு.க., - எம்.பி., கனிமொழி ஆகியோர் பேசுகின்றனர். மேலும், பல்வேறு தலைப்புகளில் பெண் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பேசுகின்றனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE