வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை இந்த மே மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.
'இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்' ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், 14.20 கிலோ எடையில் வீடுகளுக்கும், 19 கிலோ எடையில் வணிக பயன்பாட்டிற்கும் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன. அந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் மாதத்தின் 1ம் தேதியன்று, சமையல் காஸ் சிலிண்டர்விலையில் மாற்றம் செய்கின்றன. அதன்படி, கடந்த மே 7ம் தேதி வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு ஒரு சிலிண்டர் ரூ.1,015க்கு விற்பனையானது.

இந்நிலையில், இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இன்று (மே 19) முதல் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.3.50 உயர்ந்து ரூ.1,018.50க்கு விற்பனையாகிறது. அதேபோல், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து காஸ் சிலிண்டர் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், ஹோட்டல் மற்றும் டீக்கடைகளில் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE