காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தில், நேற்று தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் மூன்றாம் நாள் கருடசேவை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.ஏழாம் நாள் உற்சவமான தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 3:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் கோவிலில் இருந்து புறப்பட்டார். 3:45 மணிக்கு தேரில் பெருமாள் எழுந்தருளினார். காலை 5:55 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் செல்லும் வழிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.தேர் திருவிழாவை காண அதிகாலையில் இருந்து பக்தர்கள் திரண்டனர். தேர் ராஜவீதியை சுற்றி இரட்டை மண்டபம் திரும்பி வரும் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன. காலை 11:30 மணிக்கு தேர் நிலையை சென்றடைந்தது.தேரில் எழுந்தருளியுள்ள பெருமாளை பொது மக்கள் தரிசனத்திற்கு, மாலை வரை அனுமதி வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு தேரில் இருந்து பெருமாள் இறங்கினார்.அந்த பகுதியில் மூன்று இடங்களில் பெருமாளுக்கு மண்டப்படி நடந்தது. இதில் சாமிநாயக்கன் தோட்டம் மண்டபத்தில் எழுந்தருளிய வரதர் தேவியர்களுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 9:00 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவிலை சென்றடைந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE