ஆர்.கே.பேட்டை : கோடையில் விறுவிறுப்பாக நடக்கும் 'கள்' விற்பனை, தற்போதைய தொடர் மழையால் மந்தகதியில் நடந்து வருகிறது.
தமிழகத்தை ஒட்டிய, ஆந்திர மாநில எல்லையோர கிராமங்களில், கோடை காலத்தில் 'கள்' விற்பனை விறுவிறுப்பாக நடப்பது வழக்கம்.திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையில் இருந்து, பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், 6 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது ஆந்திர மாநில எல்லைக்கு உட்பட்ட பலிஜிகண்டிகை கிராமம்.இந்த கிராமத்தில், 'கள்' விற்பனை, ஆந்திர மாநில அரசு அனுமதியுடன் நடந்து வருகிறது. தென்னை, பனை மற்றும் ஈச்சம் மரத்தில் எடுக்கப்படும் கள், கோடையில் கிடைக்கும்.
விதவிதமான கள் பானத்தை பருக, தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களில் இருந்து கார் மூலமாக வந்து செல்லும் கள் பிரியர்கள் ஏராளம். இதனால், கோடை காலத்தில் இந்த கள்ளுக்கடைகளில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், கள் விற்பனை மந்தகதியில் நடந்து வருகிறது. கள்ளுக்கடைகள் வாடிக்கையாளர் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE