வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி., ராகுல் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு சீன ராணுவம் கிழக்கு லடாக்கில் அத்துமீறியதை அடுத்து அதற்கும் நம் நாட்டுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இருநாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்தன. ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான தொடர் பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பிலும் படைகள் குறைக்கப்பட்டன. சில இடங்களில் மட்டும் இருதரப்பும் படைகளை விலக்கி கொள்ளவில்லை. இதனிடையே எல்லையில் ராணுவ கட்டமைப்பை வலிமைப்படுத்த சீன பாங்காங் சோ அருகே மிகப்பெரிய பாலம் ஒன்றை கட்டியது.

இந்நிலையில், பாங்காங் சோ ஏரியின் குறுக்கே, சீன ராணுவம் இரண்டாவதாக பெரிய பாலத்தை கட்டி வரும் செயற்கைக் கோள் புகைப்படம் வெளியாகி உள்ளது. இது குறித்து காங்., எம்.பி ராகுல் கூறியிருப்பதாவது: சீனா பாங்காங் பகுதியில் முதல் பாலம் கட்டியதற்கு இந்திய அரசு, நாங்கள் நிலைமையை கவனித்து வருகிறோம் என்றது. சீனா பாங்காங்கில் இரண்டாவது பாலம் கட்டியுள்ளது. இதற்கும் இந்திய அரசு, நாங்கள் நிலைமையை கவனித்து வருகிறோம் என்றது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பிலும், பிராந்திய ஒருமைப்பாட்டிலும் பேச்சுவார்த்தை என்பதற்கு இடமேயில்லை. தைரியமில்லாத, பணிவான பதில் ஒன்றும் செய்ய போவதில்லை. பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE