கோலார்: உரிமையாளரை கொத்த முயற்சித்த பாம்பை கொன்ற நாய், விஷம் ஏறி பலியானது.
கோலாரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், பி.எம்.டி.சி.,யில் பணியாற்றி வருகிறார். கோலார் பீரண்டஹள்ளியில் பண்ணை வீடு உள்ளது. இங்கு 3 வயது பெண் நாயை வளர்த்து வருகிறார்.நேற்று காலை மொபைல் போனில் பேசியபடி, பண்ணை வீட்டிலிருந்து வெளியே புற்கள் இருக்கும் பகுதியை நோக்கி நடந்து சென்றார். அவருடன் நாயும் சென்றது. புற்கள் அருகில் சென்றபோது, பாம்பு ஒன்று அவரை கொத்த முயற்சித்தது.
இதை பார்த்த நாய், குரைத்து கொண்டே வந்து, பாம்புடன் சண்டை போட்டது.பாம்பும் நாயை பலமுறை கொத்தியது. ஆனாலும், விடாமல் பாம்பின் தலையில் நாய் கடித்து குதறியது. சிறிது நேரத்தில் நாய் சுருண்டு விழுந்தது. பாம்பு அதே இடத்தில் இறந்தது.நாயை மீட்ட வெங்கடேஷ், கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், அது ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் வேதனையடைந்த அவர் குடும்பத்தினர், பண்ணை வீட்டின் அருகிலேயே நாயை புதைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE