மதுரை: தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சத்திற்கு அதிகமான வருமானம் உள்ள 49 கோயில்களில் சித்த மருத்துவமனை அமைக்க 1970 ல் அரசாணை வெளியிட்டும் 6 கோயில்களில் மட்டுமே தற்போது மருத்துவமனை செயல்படுகிறது. மாநகராட்சிகளிலும் சித்தா டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதுகுறித்து தமிழக சித்தா மருத்துவமனை மற்றும் கிளினிக் சங்கத்தலைவர் ஜெய வெங்கடேஷ், செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:
தமிழகத்தில் 1970 அரசாணை படி ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் வருமானம் வரும் கோயில்களில் சித்த மருத்துவ புறநோயாளிகள் பிரிவு ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது திருச்செந்துார், ராமேஸ்வரம், மருதமலை, திருத்தணி, திருப்பரங்குன்றம் கோயில்களில் மட்டும் செயல்படுகிறது.
பழநி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மதுரை அழகர்கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உட்பட 44 கோயில்களில் சித்த மருத்துவமனை ஏற்படுத்தலாம் என தமிழக அரசு பரிந்துரை செய்தும் திட்டம் கிடப்பில் உள்ளது. 43 சித்தா டாக்டர் பணியிடங்கள் நிரந்தரமாக காலியாக உள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோயிலை சுற்றியுள்ள மக்களுக்கு சித்த மருத்துவ சேவை கிடைப்பதில்லை.

மாநகராட்சிகளில்...
தமிழகத்தில் ஒவ்வொரு மாநகராட்சியும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல அளவில் சித்தா மருத்துவப் பணியிடங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, கோவை உட்பட சில மாநகராட்சிகளில் மட்டுமே சித்த மருத்துவமனைகள் செயல்படுகிறது. அதிலும் அனைத்து மண்டலங்களிலும் டாக்டர்கள் இல்லை.
மாநகராட்சிக்கு ஒரு சித்தா டாக்டரே பணியில் உள்ளார்.அலோபதி டாக்டர்களைப் போலவே பி.எஸ்.எம்.எஸ். படித்து முடித்து ஆண்டுக்கு ஆயிரம் சித்தா டாக்டர்கள் வெளியேறுகின்றனர். காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பினாலே டாக்டர்கள் பற்றாக்குறை குறையும். நோயாளிகளுக்கு பக்கவிளைவில்லாத சரியான சிகிச்சை கிடைக்கும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE