வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: கறுப்பு பணம் பதுக்கும் இடமாக துபாய் மாறியுள்ளதாகவும், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தை டென்மார்க் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி உள்ளதாக இலங்கையை சேர்ந்த இணையதள சேனல் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கையில் இருந்து வெளியாகும் டியூப் தமிழ் என்ற இணையதள சேனலில் வெளியான வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது: துபாய்க்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தை டென்மார்க் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. திருடிய பணம், வரி மோசடி செய்து சேர்த்த பணம், தவறான முறையில் ஊழல் செய்து சேகரித்த கறுப்பு பணம் போன்றவற்றை முதலீடு செய்வதற்கு ஒரு கடைசி இடமாக துபாய் மாறியுள்ளதாக அந்நாடுகள் கூறுகின்றன.

இதற்கு ஆதாரமாக, ‛துபாய் அன்கவர்ட்' என்ற முக்கிய ஆவணம் வெளியாகி உள்ளது. உலகத்தின் முக்கியமான பொருளாதார கிரிமினல்கள், வரி மோசடியாளர்கள், போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகள் போன்றவர்கள் மூலமாக தவறாக பணம் சேர்ப்பவர்கள், முதலீடு செய்வதற்கான பிரபலமான உறுதி செய்யப்பட்ட இடமாக துபாய் மாறியுள்ளது. இதனால், இத்தகைய பேர்வழிகளுக்கு துபாயில் அழைப்பும் இருக்கிறதா என்பதும் ஒரு கேள்விக்குறியாகும்.
பெரும் ஆடம்பர வீடுகள், ஐரோப்பாவில் போதை பொருள் கடத்துபவர்கள், ஊழல் செய்து பணத்தை சேர்த்தவர்கள், வரி கட்டாதவர்கள், தங்களது பணத்தை துபாயில் கொட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், துபாயை சர்வதேச கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும், துபாயில் பல வீடுகளை வாங்கிய வீட்டு உரிமையாளர்கள் உள்நாட்டில் போலீசாரால் தேடப்படும் மோசடியாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் கறுப்பு பட்டியலில் போடப்பட்ட ஒலிகார்க் எனக்கூறப்படும் பினாமிகளின் வீடுகளும், முதலீடுகளும் துபாயில் கொட்டப்படுகிறது. முறைகேடாக சேர்த்த பணத்தை மறைத்து வைக்கும் இடமாக வடகொரியா, ஈரான், பனாமா நாடுகள் இருந்தன. தற்போது புதிதாக துபாய் மாறியுள்ளது. ரஷ்யாவின் கறுப்பு பண முதலைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த கறுப்பு பட்டியலை தொடர்ந்து அவர்கள் துபாயை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
2020ம் ஆண்டு சர்வதேச கிரிமினல்கள் தொடர்புடைய 8 லட்சம் வீடுகளை, இ -24 என்ற மீடியா நிறுவனம் ஆய்வு செய்து தகவல் வெளியிட்டுள்ளது. அதில் 20 மீடியாக்கள் இணைந்து பணியாற்றியுள்ளன. இந்த ஆய்வில், 197 நாடுகளில் 2 லட்சத்து 74 ஆயிரம் நபர்கள், மோசடி தொடர்பாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதில், வெளிநாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்து 91 ஆயிரம் பேர் துபாயில் முதலீடு செய்துள்ளதும், 146 பில்லியன் டாலர்கள் அளவுக்கு துபாயில் பதுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
மீடியாக்களின் தகவலின்படி, துபாயில், டென்மார்க்கை சேர்ந்தவர்கள் 10 வீடுகளை வாங்கியிருந்தால், அதில் ஒரு வீடு வரி மோசடி செய்து வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டென்மார்க்கை சேர்ந்த ஹசீர் அகமது என்பவர் 10 மில்லியன் குரோன் வரி மோசடி செய்து துபாயில் 5 வீடுகளை வாங்கி வைத்துள்ளனர். அவ்வாறு, துபாயில் வீடுகள், உடைமைகளை வாங்கிய டென்மார்க்கை சேர்ந்த 100 பேரை அந்நாட்டு அரசு தேட ஆரம்பித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை வந்தால், அரசு எமீரேட்ஸ் பலத்த அடி பொருளாதார அடிகளை சந்திக்கும். துபாய், தங்களது பணத்தை போடவதாக நினைத்து பலர் ஓடி கொண்டிருப்பதும். அவர்களின் பின்னால், பெட்டி பெட்டியாக கறுப்பு பணம் இருப்பதும் உலக அரங்கின் பார்வைக்கு வந்துவிட்டது. துபாயில் கறுப்பு பட்டியலில் சேர்ப்பதாக இருந்தால் போட்ட பணம் வாங்கிய வீடு எல்லாம் எதிர்காலம் அச்சமாக உள்ளது. இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
துபாய் செல்லும் இந்திய நடிகர்கள், அரசியல்வாதிகள்
துபாய்க்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பெரும்பாலான பாலிவுட் நடிகர்கள் அடிக்கடி துபாய் செல்வதும் அங்கு ‛‛டேரா'' போடுவதும் சாதாரணம். இவர்கள் மட்டுமா... இந்திய அரசியல்வாதிகள் பலரும் அடிக்கடி துபாய் சென்று வருவதும் நடக்கிறது. இதையும் இந்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE