காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவத்தில் நேற்று தீர்த்த வாரி உற்சவம் விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம், கடந்த 13ம் தேதி துவங்கியது. முக்கிய உற்சவமாக கருடசேவை மற்றும் தேர் திருவிழா நடந்தது. தொடர்ந்து நேற்று காலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக காலையில் நடந்த ஆள்மேல் பல்லக்கில் பெருமாள் வீதியுலா சென்று காலை 9:30 மணிக்கு கோவிலை சென்றடைந்தார்.பின் 100 கால் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் முடிந்து, ப்ரணதார்த்தி ஹரவரதர், காலை 11:30 மணிக்கு தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு குளத்தில் இறங்கினார்.
நிகழ்ச்சியை காண சரஸ் குளத்தை சுற்றி ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து வரதராஜ பெருமாள் கண்ணாடி அறைக்கு சென்றார். ஹரவரதர் மூலவர் அறைக்கு சென்றார்.நேற்று இரவு 9: 00 மணிக்கு புண்ணியகோடி விமானம் வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE