கடம்பத்துார் : நெடுஞ்சாலைத் துறையின் சாலைகள் மற்றும் பாலப் பணிகளின் தரத்தை உறுதி செய்ய 22 பேர் அடங்கிய, 'உள் தணிக்கை' குழுவினர், தமிழகம் முழுதும் ஆய்வு செய்து வருவதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகள், பாலப்பணிகள் முறையாகவும், தரமாகவும் நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய 'உள் தணிக்கை' என்ற புதுதிட்டம்அறிமுகப்படுத்தப்படும் என, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு, கடந்த மாதம் 22ம் தேதி தெரிவித்தார்.
இது குறித்த அரசாணை 29ம் தேதி வெளியிட்டது. தமிழகம் முழுதும் உள்ள, நெடுஞ்சாலைத் துறையின் சாலைகள் மற்றும் பாலப்பணிகளின் தரத்தை உறுதி செய்வதும், திட்டமிட்டப்படி முறையாக நடக்கிறதா என்பதை ஆய்வு செய்வதும், இந்த 22 பேர் அடங்கிய உள் தணிக்கை குழுவினர் பணியாகும்.இத்திட்டத்தின்படி, நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டுமான மற்றும் பராமரிப்பு, நபார்டு மற்றும் கிராமச் சாலைகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
மேலும், தேசிய நெடுஞ்சாலையில் மாநில அரசு நிதியில் செயல்படும் பணிகள் மற்றும் சென்னை பெருநகர திட்ட அலகுகளில் நடந்து வரும் பணிகளை, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.அந்த வரிசையில், திருவள்ளூர் அடுத்த, புட்லுார் பகுதியில், கடவுப்பாதை 16ல், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரால் மேற்கொள்ளப்படும்.காக்களூர் - புட்லுார் இணைக்கும் வகையில், 18 கோடி ரூபாயில், 620 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலம் உடைய பாலம் கட்டுமான பணியை, உள் தணிக்கை திட்டக் குழுவினர் நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.இங்கு, ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில், இரண்டு துாண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மேலும், நெடுஞ்சாலை துறை பகுதியில், 14 துாண்கள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடந்து வந்த நிலையில் மின் கம்பங்களால் பணிகள் தாமதமாயின.
தற்போது, மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, மேம்பால பணிகள் விரைவில் போக்குவரத்து துவங்கும் வகையில், துரித வேகத்தில் நடக்கின்றன.நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த சென்னை வட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர்ப.செந்தில் ஆய்வுக்கு தலைமை தாங்கினார்.கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் ம.சத்தியசீலன் மற்றும் நான்கு உதவி கோட்டப்பொறியாளர்கள், எட்டு உதவிப் பொறியாளர்கள் அடங்கிய உள் தணிக்கை குழுவினர் பார்வையிட்டு, பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தனர்.
இதேபோல் பட்டாபிராம் பகுதியில், கடவுப்பாதை எண்., 2ல் நடந்து வரும் மேம்பால பணிகளையும் ஆய்வு மேற்கொண்டனர்.மேலும், திருவாலங்காடு பகுதியில் நடந்து வரும் சாலை, மேம்பால பணிகள் உட்பட தமிழகத்தில் நடந்து வரும் சாலைப் பணிகளை ஆயவு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என, உள் தணிக்கை குழுவினர் தெரிவித்தனர்.இந்த ஆய்வின் போது, செங்கல்பட்டு கிராம சாலைகள் கோட்டப் பொறியாளர் ராமச்சந்திரன், உதவி கோட்டப் பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் டில்லிபாபு உட்பட நெடுஞ்சாலைத் துறையினர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE