சென்னை : சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த, இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு சி.டி.எச்., சாலை பகுதியைச் சேர்ந்தவர் துளசிராம். இவரது மனைவி கீதா. இவர்களின் இளைய மகன் சரண், 18.கடந்த 21ம் தேதி, நண்பரின் பிறந்த நாளை கொண்டாடி, அன்று மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, போலிவாக்கம் அருகே வேன் மோதி, சரண் கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தோர் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து, அன்று இரவே மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், நேற்று பிற்பகலில் சரண் மூளைச்சாவு அடைந்ததாக பெற்றோரிடம் கூறினர்.
இதையடுத்து, மகனின் உடல் உறுப்புகளை தானமளிக்க, சரணின் பெற்றோர் முன்வந்தனர். பின், இரண்டு கண்கள், இதயம், கல்லீரல், இதய வால்வுகள், இரு சிறுநீரகங்கள், தோல் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இந்த உடல் உறுப்புகள், தகுதியான உள்நாட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளன.பிரேத பரிசோதனைக்குப் பின், சரணின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE