பெங்களூரு,:பெங்களூரில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருக்கு பூங்கா நகரம், சிலிக்கான் பள்ளத்தாக்கு என்ற பெயர்களுடன் ஆயிரம் ஏரிகளின் நகரம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. தற்போது, பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.கோடை காலம் வந்தால் தண்ணீருக்காக மக்கள் அலைந்து திரியும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கால கட்டத்தில் பெங்களுரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வறண்டு விடுகின்றன.பெங்களூரு நகரின் மக்கள் தொகை 1.30 கோடியாக உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 2 கோடியாக அதிகரிக்கும் என புள்ளிவிபரம் சொல்கிறது. அப்போது நாள் ஒன்றுக்கு 2,000 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை எழும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பெங்களூரு உட்பட கர்நாடகத்தின் தென்பகுதி மாவட்டங்களுக்கான தண்ணீர் தேவையை காவிரி ஆறு பூர்த்தி செய்து வருகிறது. பெங்களூரிலும் காவிரி நீர் வினியோகம் செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில் இருந்து நாளொன்றுக்கு 1,450 மில்லியன் லிட்டர் தண்ணீர், பெங்களூரு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.அதிகரித்து வரும் மக்கள் தொகை, கோடை வெயில் போன்றவற்றால் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எத்தினஹொளே மற்றும் திப்பகொண்டனஹள்ளி நீர்தேக்க திட்டப்பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன.காவிரி ஐந்தா-வது குடிதண்ணீர் திட்டப்பணிகள் இறுதி வடிவத்தை பெற்று வருகிறது. அந்த திட்டம் மூலம் 10 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரில் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
முக்கியமாக டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, பானஸ்வாடி, டேனரி ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.பெங்களூரு மாநகராட்சி நகரின் பல்வேறு பகுதிகளில் 123 கோடி ரூபாய் செலவில் 905 குடிநீர் சுத்திரிகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குடிநீர் தட்டுப்பாடு குறித்து, மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. மாநகராட்சி சார்பில் நகரில் பல்வேறு பகுதிகளுக்கு 65 டேங்கர் லாரிகள் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.புரம், மாரத்தஹள்ளி, பசவனபுரா, ஒயிட்பீல்டு, சர்ஜாபூர், பெல்லந்தூர், பொம்மனஹள்ளி, தலகட்டபுரா, கெங்கேரி, எலஹங்கா, பீன்யா, மாகடி போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் அன்றாட குடிநீர் தேவைக்கு தனியார் டேங்கர்களை நாடுகின்றனர்.
இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தி, தனியார் டேங்கர் லாரிகள் அதிக லாபம் ஈட்டி வருகின்றன. 3,000 முதல் 4,000 டேங்கர்களில் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. 200 டேங்கர்கள் மட்டுமே, மாநகராட்சி அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன. மற்ற டேங்கர்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.