பல்லடம் : பல்லடம் அருகே, அரசு பள்ளி இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, பா.ஜ., சார்பில் புகார் அளிக்கப்பட்டது.இது குறித்து, ஒன்றிய பா.ஜ., தலைவர் பூபாலன், தாசில்தார் நந்தகோபாலிடம் அளித்த புகார் மனு:கரைப்புதூர் ஊராட்சி, குன்னாங்கல்பாளையம் கிராமத்தில், அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு போதிய இடவசதி, கழிப்பிடம் கிடையாது. பள்ளியின் பின்புறம், பள்ளிக்கு சொந்தமான, 4 சென்ட் இடம் உள்ளது.நீண்ட காலமாக, காலியாக உள்ள இந்த இடம் பயன்பாடின்றி புதர் மண்டி கிடக்கிறது.
இதை சாதகமாக பயன்படுத்தி சிலர் பள்ளி இடத்தில் வேலி அமைத்துள்ளனர். பள்ளியில் இடப்பற்றாக்குறை உள்ளதால், பின்வரும் நாட்களில் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட இடம் தேவைப்படும்.ஆனால், பள்ளி இடத்தை சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதால், இடம் பறிபோகும் அபாயம் உள்ளது. எனவே, இடத்தை மீட்பதுடன், அனுமதியின்றி வேலி அமைக்கப்பட்டது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE