காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கோடை மழையால் மேய்ச்சல் நிலங்களில் புற்கள் முளைத்து, கால்நடைகளுக்கு தீவனம் கிடைத்து வருகிறது. இதனால் வழக்கத்தைவிட, ஆயிரக்கணக்கான லிட்டர் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் வாயிலாக, அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 75 சங்கங்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 296 சங்கங்களும் செயல்படுகின்றன. சங்க உறுப்பினர்களாக 13 ஆயிரத்து 652 பேர் உள்ளனர்.

கொள்முதல்
இவர்கள், மாடுகளில் இருந்து கறக்கும் பால், அந்தந்த பகுதி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் ஊற்றுகின்றனர். அதற்கான தொகை, Aசங்க உறுப்பினர்களுக்கு முறையாக வழங்கப்படும்.கடந்த நான்கு மாதங்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,08,903 லிட்டர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,57,986 லிட்டர் என, ஒருங்கிணைந்த மாவட்டத்தில், 2,66,889 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கத்தைவிட இரு மாவட்டங்களிலும் சேர்த்து 10 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.சங்க உறுப்பினர்களிடம் இருந்து பெறப்படும் பால் சேகரிக்கப்பட்டு, அருகில் உள்ள பால் குளிர்விப்பான் மற்றும் குளிரூட்டும் நிலையத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.குளிர்விப்பான் நிலையத்தில் 5,000 லிட்டர் வரை பால் சேமித்து வைக்க கூடிய வசதி உள்ளது. குளிரூட்டும் நிலையத்தில் 30 ஆயிரம் லிட்டருக்கு மேல் பால் சேமித்து வைக்க முடியும்.
9.19 கோடி ரூபாய்
பெயர் வெளியிடாத கூட்டுறவு துணை பதிவாளர், பால்வள அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோடை காலத்தில் மாடுகள் வெயில் தாக்கத்தால் தீனி உட்கொள்ளாது. மேய்ச்சல் நிலங்கள் வறண்டு காணப்படும். இதனால் பசுந்தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டு, பால் உற்பத்தியும் பாதிக்கப்படும்.இது போன்ற காரணங்களால், கோடையில் பால் உற்பத்தி குறையும். இந்த ஆண்டு வெயில் தாக்கத்தில் கறவை மாடுகள் பாதிக்கப்பட்டு, பால் உற்பத்தி குறைந்தது.
ஆனால், இந்த மாதம் முதல் தேதியில் இருந்து அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால், மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளுக்கு ஓரளவு பசுந்தீவனம் கிடைக்கிறது. மேலும், வெயில் தாக்கம் குறைந்ததால், பால் உற்பத்தி அதிகரிக்க துவங்கியது. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9.19 கோடி ரூபாய், வங்கி வாயிலாக கடன் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 3.37 கோடி ரூபாய் கடன் வசதி செய்யப்பட்டு உள்ளது.பால் உற்பத்தியை அதிகரிக்க, நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மழை தொடர்ந்தால், பால் கொள்முதலும் அதிகரிக்கும்.அச்சிறுப்பாக்கத்தில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய பால் குளிரூட்டும் நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக, அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் கூடுதல் பால் சேமித்து வைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பால் குளிர்விப்பான் மற்றும் குளிரூட்டும் நிலையங்கள் செயல்படும் இடங்கள்: பெருநகர், உத்திரமேரூர், பெரும்பாக்கம், எலப்பாக்கம், அச்சிறுப்பாக்கம், திருக்கழுக்குன்றம் ஆகிய ஆறு இடங்களில் பால் குளிர்விப்பான் நிலையங்கள் செயல்படுகின்றன. தவிர, பாலுசெட்டி சத்திரம் பகுதி யில், 30 ஆயிரம் லிட்டர், சானுார் பகுதியில், 52 ஆயிரத்து 500 லிட்டர் கொள்ளளவு உடைய பால் குளிரூட்டும் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் சேமித்து வைக்கப்படும் பால், அதற்கான வாகனங்கள் மூலம், சென்னையில் உள்ள பால் பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து பால் பாக்கெட்டாக தயார் செய்து, அனைத்து பகுதிகளுக்கும் 'ஆவின்' நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE