மும்பை,-பல்வேறு பண மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள மஹாராஷ்டிர போக்குவரத்துத் துறை அமைச்சர் அனில் பராப் உள்ளிட்டோரின் வீடுகளில், அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கூட்டணி அரசு அமைந்து உள்ளது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த அனில் பராப், மாநில போக்குவரத்துத் துறை மற்றும் சட்டசபை விவகாரங்களுக்கான அமைச்சராக உள்ளார். இவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் ஏற்கனவே உள்ளன. ரத்னகிரி மாவட்டம் தபோலியில் நிலம் விற்பனையில் மோசடி செய்ததாக அவர் மீது புகார் உள்ளது.
மேலும், கறுப்பு பட்டியலில் உள்ள ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணம் வசூலிக்கும்படி உத்தரவிட்டதாக பராப் மீது முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் புகார் கூறியிருந்தார்.இந்நிலையில், இந்த மோசடி வழக்குகள் தொடர்பாக அனில் பராப் உள்ளிட்டோர் மீது, அமலாக்கத் துறை சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது.
இது தொடர்பாக, இவர்களுக்கு சொந்தமாக மும்பை, தபோலி, புனே உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகளில், அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.இந்த சோதனையின்போது அனில் பராப், அவரது வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE