'ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகளில் பா.ஜ., அனைத்து துறைகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது' என, காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகளாகியுள்ளதை, பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் டில்லியில் நேற்று, 'எட்டு ஆண்டுகள் - 8 சூழ்ச்சிகள் - பா.ஜ., அரசு தோல்வி' என்ற தலைப்பில் சிறு கையேட்டை தயாரித்து காங்.,வெளியிட்டது.

இது குறித்து காங்., மூத்த தலைவர்கள் அஜய் மாகன், ரந்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கூறியதாவது:ஆட்சிக்கு வருவதற்கு முன் பா.ஜ.,வினர் வெளியிட்ட விதவிதமான கோஷங்கள் எல்லாம் இப்போது எங்கே போனது என தெரியவில்லை.அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி, விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் நிலையில் நல்ல நாட்களாக எதை கருதுவது?
ஊடக சுதந்திரம், பாலின வேறுபாடு, சட்டம் ஒழுங்கு, சமூக நல்லிணக்க வளர்ச்சி, ஜனநாயக வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் சர்வதேச அளவில் இந்தியாவின் தரம், பலமடங்கு சரிந்து விட்டது. பா.ஜ., அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது டில்லி நிருபர் -