தமிழக நிகழ்வுகள்:
பஞ்சலோக சுவாமி சிலைகள் மீட்பு மயிலாடுதுறையில் வாலிபர் கைது
சென்னை :மயிலாடுதுறையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, இரண்டு பஞ்சலோக சிலைகளை மீட்டு, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே, டி.மணல்மேடு என்ற கிராமத்தில், இரண்டு பஞ்சலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, மாநில சிலை
கடத்தல் தடுப்பு பிரிவு, டி.ஜி.பி., ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்தது.
2 கோடி ரூபாய்
இதையடுத்து, ஐ.ஜி., தினகரன் தலைமையிலான போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது, டி.மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், 32, என்பவர் சிலைகளை பதுக்கி இருப்பது தெரியவந்தது. இவரிடம், போலீசார் சிலை வியாபாரிகள் போல அணுகினர். 'என்னிடம் புத்த மத பெண் கடவுள், விநாயகர் என, இரண்டு பஞ்சலோக சிலைகள் உள்ளன. இவற்றின் மதிப்பு, இரண்டு கோடி ரூபாய்.
'இதை விட ஒரு ரூபாய் குறைந்தாலும், சிலைகளை விற்க மாட்டேன். 'வெளிநாடுகளுக்கு கடத்த முயன்று வருகிறேன்' என, போலீசாரிடம், சுரேஷ்
கூறியுள்ளார்.இதைஅடுத்து, போலீசார் சுரேஷை நேற்று கைது செய்து சிலைகளை மீட்டனர். விசாரணையில், புத்த மத கடவுளான அவலோகிதேஸ்வராவின் மனைவி தாராதேவி சிலை என்பதும், இது, 700 ஆண்டுகள் தொன்மையானதும், திபெத் நாட்டில் வழிபடக் கூடியது என, தெரியவந்தது. அதேபோல, விநாயகர் சிலை, 300 ஆண்டுகள் பழைமையானது என, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.மர்ம நபர்கள்இந்த சிலைகள் சுரேஷுக்கு எப்படி கிடைத்தது, இதன் பின்னணியில் இருக்கும் மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சிலையை மீட்ட போலீசாருக்கு, 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
முட்புதரில் அழுகிய உடல்கொலையா என விசாரணை
![]()
|
விழுப்புரம் :முட்புதரில் அழுகிய நிலையில், மின் வாரிய ஊழியர் உடல் கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம், சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 49; மடப்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் லைன் பிரிவு
ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரை, கடந்த 8ம் தேதி முதல் காணவில்லை என அவரது மனைவி ராஜராஜேஸ்வரி, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 11:30 மணியளவில், விழுப்புரம், ஜானகிபுரம் நெடுஞ்சாலை அருகே, ஆவின் பாலகம் பின்புறம் உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த உடலை மீட்ட போலீசாரிடம், 'இறந்து கிடந்தது தன் கணவர் வெங்கடேசன் தான்' என, ராஜராஜேஸ்வரி உறுதி செய்தார். வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா என போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
**************************
இந்திய நிகழ்வுகள்:
3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர் :ஜம்மு - காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஜுமாகுண்ட் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து தீவிர சோதனை நடத்தினர். அங்கு ஊடுருவ முயன்ற லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பெண் பலி
காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் வசித்தவர் அம்ரீன் பட், 35. சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமான பெண். தன் மருமகன் பர்கான் ஜுபைருடன், நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் உட்கார்ந்து இருந்தார்.
அங்கு வந்த லஷ்கர் -- இ - தொய்பா பயங்கரவாதிகள், இருவர் மீதும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அம்ரீன் உயிரிழந்தார்.ஜுபைருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குஜராத்தில் ரூ.500 கோடி போதை பொருள் பறிமுதல்
புஜ்,:குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் அருகே, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'கோகெய்ன்' எனப்படும் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்.
குஜராத்தின் கட்ச் மாவட்டம் முந்த்ரா துறைமுகத்திற்கு வந்த வெளிநாட்டு கப்பலில் இருந்த சரக்கு பெட்டகங்கள், அருகில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த சரக்கு பெட்டகங்களில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சரக்கு பெட்டகம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், இறக்குமதி பொருட்களுக்கு நடுவே, 500 கோடி ரூபாய் மதிப்பிலான, 56 கிலோ கோகெய்ன் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது; அதை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடந்த மாதம் குஜராத்தின் கன்ட்லா துறைமுகம் அருகே சரக்கு பெட்டகத்தில் மறைத்து வைத்திருந்த, 1,300 கோடி ரூபாய் மதிப்பிலான, 260 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு முந்த்ரா துறைமுகத்தில் இரு சரக்கு பெட்டகங்களில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 3,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவே, இந்தியாவில் மிக அதிக மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதலாக கருதப்படுகிறது.
*************************
உலக நிகழ்வுகள்;
இலங்கையில் நடந்த கலவரம் முன்னாள் பிரதமரிடம் விசாரணை
கொழும்பு :இலங்கையில் இம்மாத துவக்கத்தில் நடந்த கலவரம் தொடர்பாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிக்குகாரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி கொழும்புவில் உள்ள அவரது அலுவலகத்தின் முன் ஏராளமானோர் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வந்தனர்.அதுபோல பிரதமராக இருந்த மகிந்தா ராஜபக்சேவின் வீட்டின் முன்பாகவும் போராட்டம் நடந்தது. கடந்த 9ம் தேதி மகிந்தா ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை தாக்கினர். இதையடுத்து வெடித்த வன்முறையில் 10 பேர் உயிரிழந்தனர். ஏராள
மானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மகிந்தா ராஜபக்சேவிடம் குற்றப்பிரிவு போலீசார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்தன.வன்முறை தொடர்பாக ஆளுங்கட்சி எம்.பி.க்கள் மூன்று பேருக்கு நெருக்கமான இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மகிந்தா ராஜபக்சேவின் மகனும் முன்னாள் அமைச்சருமான நமல் ராஜபக்சே அளித்த வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர். 'கலவரத்திற்கு எதிர்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா காரணம்' என ஆளும் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் அதை எதிர்கட்சி மறுத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE