சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோவிட் பரவல் அதிகரித்து வருவதாகவும், தொற்று பரவலை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, அண்ணாநகர், பெருங்குடி, கோடம்பாக்கம் மண்டலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. சில குறிப்பிட்ட நிறுவனங்களிலும் கோவிட் பரவல் அதிக அளவில் காணப்படுகிறது. சில குடும்ப நிகழ்ச்சிகளில் கோவிட் பரவும் நிலை உருவாகி உள்ளது.

கோவிட் பரவலை தீவிரமாக கண்காணிக்காவிடில், தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கோவிட் அதிகரித்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இணை நோய் உள்ளவர்களும் , முதியோர்களும் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். லேசான அறிகுறிகள் இருந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் தவறாமல் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
தடுப்பூசிக்கு பிறகு நோய் எதிர்ப்பு திறன் குறைந்து வருவதை தொற்று அதிகரித்து வருவது காட்டுகிறது. தமிழகத்தில் 93.7 4 சதவீதம் பேர் முதல் தவணை, 82.55 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். 43 லட்சம் பேர் இன்னும் முதல் தவணையும், 1.22 கோடி பேர் 2 வது தவணை தடுப்பூசியும் போட்டு கொள்ளவில்லை. இன்னும் தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE