சென்னை: 'வாய்தா படத்தை தடை செய்ய வேண்டும்' என, கோவை வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மகிவர்மன் இயக்கத்தில், புகழ் மகேந்திரன், நாசர், மு.ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்த, வாய்தா படம் நேற்று வெளியானது.
இப்படத்திற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேற்று படத்தை பார்த்த கோவை வழக்கறிஞர்கள், 'படத்தை தடை செய்ய வேண்டும் அல்லது ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்' என நெருக்கடி கொடுத்துள்ளனர்.இது குறித்து வழக்கறிஞர்கள் கூறியதாவது:வாய்தா படத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறையை பற்றி மோசமாக சித்தரித்துள்ளனர்.
'நீதி, பணக்காரர்களுக்கு மட்டுமே; ஏழைகளுக்கு இல்லை' என்று காட்சிப்படுத்தி உள்ளனர். சில காட்சியில், வழக்கறிஞர்களை தரக்குறைவாக காட்டியுள்ளனர். இந்த மாதிரியான படங்களுக்கு பதில், விழிப்புணர்வு தரும் வகையில், அதற்கான சட்டப் பிரிவை பயன்படுத்தி காட்சிப்படுத்தி இருக்கலாம். இப்படத்தை தடை செய்ய வேண்டும்.
இல்லையேல், ஆட்சேபிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும். இப்படத்தால் நீதித்துறை மீதான மரியாதை பொதுமக்களிடம் குறையும். இதுபோன்ற காட்சிகளை மற்ற படங்களிலும் பயன்படுத்த கூடாது என்பதே எங்கள் விருப்பம். இவ்வாறு அவர்கள் கூறினர்.