கோவை :கோவையில், குழந்தையை கடத்த முயற்சித்த உத்தரப்பிரதேச வாலிபருக்கு பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவை, சிங்காநல்லுார், எம்.ஜி.ஆர்., காலனியில் இரண்டு நாட்களுக்கு முன், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், பஞ்சு மிட்டாய் விற்றுக் கொண்டிருந்தார். அவரை அருகில் நின்று வேடிக்கை பார்த்த 6 வயது சிறுமியை, பஞ்சு மிட்டாய் தருவதாக கூறி, அந்த வாலிபர் அழைத்துள்ளார்.வர மறுத்த சிறுமியை இழுத்துச் சென்றுள்ளார்.
அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரித்த போது, சிறுமியை அவர் கடத்திச் செல்ல முயற்சித்தது உறுதி செய்யப்பட்டது.வாலிபர், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த யோகேஷ் என, தெரியவந்தது. வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், சிங்காநல்லுார் போலீசில் ஒப்படைத்தனர்.அதே வாலிபர், நேற்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார். முதல் நாள் அவரை சிங்காநல்லுார் போலீசில் ஒப்படைத்த இருவர், அவரை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் அந்த நபரை பிடித்தனர்.'குழந்தை கடத்தல் ஆசாமி' என, கூறியதும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், மீண்டும் தர்ம அடி கொடுத்தனர். அவர் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.பொதுமக்கள் ஒப்படைத்த நபரை, சிங்காநல்லுார் போலீசார் எப்படி விடுவித்தனர் என, விசாரணை நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE