புதுடில்லி: நாட்டில் குழந்தைகளை நான் பிரதமராக பார்ப்பதில்லை , அவர்களது குடும்பத்தில் ஒருவனாகத்தான் தற்போது பார்க்கிறேன் என பிரதமர் மோடி கூறினார் .

பா.ஜ., ஆட்சியில் அமர்ந்து 8 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு பிரதமர் இன்று பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் பி.எம்.கேர்ஸ் பார் சில்ரன்ஸ் என்ற குழந்தைகள் காப்பதற்கென ஒரு புதிய திட்டத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது :
நாடு தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது. உலகளவில் இந்தியா மீதான மதிப்பு உயர்ந்துள்ளது. கோவிட் பாதிப்பின் போது நாம் மருத்துவர்களையும், விஞ்ஞானிகளையும் நம்பினோம். இதில் நல்ல பலன் கிடைத்தது. இது போல் இளைஞர்கள் மீதான நம்பிக்கையும் நல்ல பலனை தரும். சப்கா சாத்- சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்- சப்கா பிரயாஸ் என்ற மந்திரத்தால் நாடு முன்னேறுகிறது.
இன்றைய குழந்தைகளுக்கான திட்டத்தின் மூலம் பல குழந்தைகள் பலன் பெறுவர். குறிப்பாக கோவிட்டால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விச்செலவை அரசு ஏற்கும். ஏற்கனவே ஆயூஸ்மான் ஹெ ல்த் கார்டு மூலம் குழந்தைகள் சிகிச்சைக்காக ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. பிரதமர் நிதியின் மூலம் மருத்துவமனைகள், மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பிரதமர் கேர் திட்டத்தின் கீழ் இன்றைய விழாவில் நான் குழந்தைகள் மத்தியில் ஒரு பிரதமராக பேசவில்லை. அவர்களது குடும்பத்தில் ஒருவனாகத்தான் பார்க்கிறேன். குழந்தைகள் மத்தியில் இன்று மிக மகிழ்வாக உள்ளேன். இவ்வாறு மோடி பேசினார்.

8ஆண்டு சாதனை
மத்தியில் பா.ஜ., ஆளும் நல்ல நிர்வாகத்தால் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதுடன் மக்களிடைய பெரும் நம்பிக்கை பிறந்துள்ளது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்