சென்னை :தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, தி.மு.க., அரசு திட்டமிடும் தகவல் வெளியாகியுள்ளது.தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்றது முதல், தி.மு.க., அரசை, அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
குற்றச்சாட்டு
கொரோனா காலத்தில்கோவிலை திறக்கக் கோரி நடத்திய போராட்டம், மின் வாரியம் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டு, பட்டினப் பிரவேசதடைக்கு எதிரான குரல் என, அண்ணாமலையின் செயல்பாடுகள், தி.மு.க., அரசுக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளன.இந்நிலையில், கர்ப்பிணியருக்கான ஊட்டச்சத்து தொகுப்பு வாங்கியதில், 77 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், 'ஜி ஸ்கொயர்' என்ற தனியார் நிறுவனத்திற்கு, கட்டுமான அனுமதிகளில் தாராள சலுகைகள் கிடைப்பதாகவும், 5-ம் தேதி, அரசுக்கு எதிராக அண்ணாமலை குற்றச்சாட்டுகள் சுமத்தினார்.இதெல்லாமே, தி.மு.க., அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளன. இதற்கு மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், பால் வளத் துறை அமைச்சர் நாசர், வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் மாறி மாறி விளக்கம் அளித்தனர்.
![]()
|
'டுவிட்டர்' பதிவு
ஆனாலும், அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் அண்ணாமலையை, எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என, தி.மு.க.,வினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.அண்ணாமலை, ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றிய கர்நாடகாவில், அவருக்கு எதிராக ஏதாவது சிக்குமா என, தி.மு.க., தரப்பில் ஆராயப்பட்டது. அம்மாநில முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் உள்ளிட்ட காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள், முக்கிய அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளனர்.
'அண்ணாமலையை சிக்க வைக்கும் அளவுக்கு, வில்லங்கம் எதுவும் இல்லை' என, அவர்கள் கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு எட்டாண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி, 'டுவிட்டர்' பக்கத்தில் அண்ணாமலை, ஒரு பதிவு வெளியிட்டார்.அது, குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி விட்டதாக கூறி, தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும், ஆதரவாளர்களும், தமிழகம் முழுதும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஆலோசனை
இதை பயன்படுத்தி, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், அண்ணாமலையை கைது செய்ய, தி.மு.க., அரசு ஆலோசித்து வருவதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம், தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில் வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட நுாபுர் சர்மா போலவே, அண்ணாமலையும் செயல்பட்டு வருகிறார். அண்ணாமலையை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற அமைப்புகளும், தனிப்பட்ட முறையில் பலரும் புகார் கொடுத்துள்ளனர்.
அதன் பின்னும் அண்ணாமலை, தன் பதிவை நீக்கவில்லை. வன்கொடுமை சட்டப்படி, அவர் கைது செய்யப்பட வேண்டிய பதிவு இது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'அண்ணாமலையை கைது செய்தால், அவர் மேலும் பிரபலமாகி விடுவார். மத்திய அரசின் எதிர்வினையை சந்திக்க வேண்டியிருக்கும்' என ஒரு தரப்பினரும், 'வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய கிடைத்த வாய்ப்பை தவற விடக் கூடாது' என, மற்றொரு தரப்பினரும் கூறுவதாக, தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். போலீஸ் அதிகாரிகள், கூட்டணி கட்சி தலைவர்
களிடம், இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.