உடுமலை : அரசு கொப்பரை கொள்முதல் துவக்கியும், வெளி மார்க்கெட்டில் விலை உயரவில்லை. கட்டுப்பாடு, தொகை விடுவிப்பதில் தாமதம், கூலி உள்ளிட்ட காரணங்களில், பெரும்பாலான விவசாயிகள் மையத்தை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
கட்டுப்பாடுகளை எளிமைப்படுத்தி, ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தென்னை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில், உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலுார், காங்கயம் ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில், அரசு கொப்பரை கொள்முதல் மையங்களை துவக்கி, விவசாயிகளிடமிருந்து, கிலோ, 105.90 ரூபாய்க்கு நேரடியாக கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.கடந்த, பிப்., 1ம் தேதி துவங்கி, வரும், ஜூலை, 31 வரை இம்மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயராத மர்மம்
வழக்கமாக அரசு கொப்பரை கொள்முதல் துவக்கினால், வெளி மார்க்கெட்டில், விலை உயரும். ஆனால், நடப்பாண்டு, வெளி மார்க்கெட்டில், 85 ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது. அரசு கொள்முதல் மையங்களுக்கு நேரடியாக விவசாயிகள் கொப்பரை கொண்டு வர வேண்டும்.ஆதார், வங்கிக்கணக்கு எண் நகல், பட்டா, சிட்டாவுடன் முன் பதிவு செய்து வரும் விவசாயிகளிடம், ஈரப்பதம், நிறம் உள்ளிட்ட காரணங்களினால், கழிக்கப்படுகிறது.கொண்டு வரும், 70 சதவீதம் கொப்பரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு, அதற்குரிய தொகையை உடனடியாக செலுத்தாமல், 25 முதல், 40 நாள் வரை தாமதம் ஆகிறது.
மேலும், விளை நிலத்திலிருந்து, கொள்முதல் மையத்திற்கு கொண்டு வரும் சரக்கு வாகன வாடகை மட்டுமின்றி, மையத்தில் ஏற்றுக்கூலியாக, 50 கிலோ மூட்டைக்கு, 21 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு, விவசாயிகளுக்கு, 40 ரூபாய் வரை செலவாகிறது.இதனால், அரசு கொப்பரை கொள்முதல் மையத்திற்கும், வெளி மார்க்கெட்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.கொண்டு வந்து, தரமற்ற கொப்பரை என கழித்து, விற்றதற்கும், தொகை தாமதமாவதால், பெரும்பாலான தென்னை விவசாயிகள், அரசு கொப்பரை கொள்முதல் மையத்திற்கு, உற்பத்தி செய்த கொப்பரையை கொண்டு வராமல், வியாபாரிகளிடம் விற்று வருகின்றனர்.
வியாபாரிகள், எண்ணெய் உற்பத்தி ஆலைகள் 'சிண்டிகேட்' அமைத்து, விலையை உயர்த்தாமல், குறைத்து வாங்குகின்றனர்.எனவே, அரசு கொப்பரை கொள்முதலில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, விவசாயிகளும் அலைகழிக்கப்படாமல், கொள்முதல் செய்யவும், ஆதார விலையை உயர்த்தவும், போக்குவரத்து கட்டணம் விவசாயிகளுக்கு வழங்கவும் வேண்டும்.
அரசுக்கு கோரிக்கை
விவசாயிகள் கூறியதாவது:அரசு கொப்பரை கொள்முதல் துவங்கினால், வெளி மார்க்கெட்டில் விலை உயர வேண்டும். ஆனால், கடந்த, 6 மாதமாக விலை உயரவில்லை.வழக்கமான விலையை விட குறைந்து, 85 ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது. கொப்பரை கொள்முதல் மையத்திற்கு, கொப்பரை கொண்டு சென்றால், ஈரப்பதம், நிறம் என தரப்பரிசோதனையில், 20 முதல் 40 சதவீதம் கழிக்கப்படுகிறது.
அதற்குப்பின், ஏற்றுக்கூலியாக, மூட்டைக்கு, 21 ரூபாய் செலவாகிறது. கிராமத்திலிருந்து, ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு கொண்டு வர, 20 ரூபாய் வரை செலவாகிறது. இதனை கணக்கிட்டால், அரசு கொள்முதல் மையத்தை விட, வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலை கிடைப்பதோடு, உடனடியாக பணம் கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து கொப்பரையும், எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல், கொள்முதல் செய்ய வேண்டும்.போக்குவரத்து கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளவும், ஒரு கிலோவுக்கு, 150 ரூபாய் ஆதார விலை நிர்ணயித்து, ஆண்டு முழுவதும் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.
தேங்காய் சாகுபடி பரப்பு கடந்தாண்டு, அனைத்துப்பகுதிகளிலும், பல மடங்கு அதிகரித்துள்ளது. கூடுதல் சாகுபடி பரப்பில் இருந்து தேங்காய் வரத்து சில ஆண்டுகளில் துவங்கும்.தற்போதே, தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சி விவசாயிகளை கலக்கமடைய செய்துள்ளது.எதிர்காலத்தில், வரத்து மேலும் அதிகரித்தால், தென்னை சாகுபடியை கைவிடும் நிலை விவசாயிகளுக்கு ஏற்படும்.எனவே, தமிழக அரசு, தென்னை சாகுபடியில் நிலவி வரும் மாற்றங்கள், வர்த்தகம் குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க தனியாக வாரியம் அமைக்கவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.