சென்னை :''நவீன கால வளர்ச்சிக்கு தேவையான பாட திட்டத்துடன், சென்னை ஐ.ஐ.டி.,யில் இரண்டாண்டு எம்.ஏ., படிப்புகள் விரைவில் துவங்கப்படும்,'' என, அதன் இயக்குனர்
காமகோடி தெரிவித்தார்.தேசிய உயர்கல்வி தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,யில் தற்போது, ஐந்தாண்டு கால ஒருங்கிணைந்த எம்.ஏ., மேம்பாட்டு படிப்புகள், ஆங்கில படிப்புகள் நடத்தப்படுகின்றன.
திட்டம்
புதிதாக, மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை சார்ந்த, புதிய எம்.ஏ., படிப்புகளை அறிமுகம் செய்ய, சென்னை ஐ.ஐ.டி., முடிவு செய்துள்ளது.இதன்படி, ஏற்கனவே நடத்தப்படும் எம்.ஏ., படிப்புகளுடன், எம்.ஏ., பொருளாதார படிப்பும் துவக்கப்பட உள்ளது. அனைத்து எம்.ஏ., படிப்பையும், இரண்டாண்டு கால படிப்பாக மாற்றவும், ஐ.ஐ.டி., திட்டமிட்டுள்ளது.இந்த புதிய படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா, 25 இடங்கள் இந்திய மாணவர்களுக்கும், மீதமுள்ள இடங்கள்
சர்வதேச மாணவர்களுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிக்கும் முறைகள், அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் அறிவிக்கப்படும்.
மாணவர் சேர்க்கைக்கு, தற்போது நடத்தப்படும் மானுடவியல் படிப்பு நுழைவு தேர்வுக்கு பதிலாக, வேறு நுழைவு தேர்வு, தனியாக நடத்தப்பட உள்ளது.
மறுசீரமைப்பு
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி கூறியதாவது:சென்னை ஐ.ஐ.டி.,யில் மானுடவியல், அறிவியல், வணிகவியல், இன்ஜினியரிங் ஆகிய பல தரப்பட்ட பாடங்களையும், மாணவர்கள் படிக்கும் வகையில், இளநிலை பட்டப் படிப்புகள் மறுசீரமைக்கப் படுகின்றன. நவீன உலகின் வெவ்வேறு சவால்களை சந்திக்கவும், எதிர்கொள்ளவும், அடுத்த தலைமறை மாணவர்களுக்கு அவசியமான மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் படிப்புகள் நடத்தப்பட உள்ளன.நவீனகால தேவைகள் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப, புதிய படிப்புகளில், நவீன பொருளியல், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாடு, சுகாதார கொள்கை, சுற்றுச்சூழல் மானுடவியல், தொழில்நுட்ப கொள்கைகள், கணக்கீட்டு மொழிகள் போன்றவை, இரண்டாண்டு எம்.ஏ., பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE