திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த ஆனி கிருத்திகை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக் கோவிலில் குவிந்ததால், பொது வழியில் நான்கு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
மலர் அலங்காரம்
திருத்தணி முருகன் கோவிலில், ஆனி மாத கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9:30 மணிக்கு மலைக்கோவில் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சாய்ரட்சை பூஜையும், இரவு 7:00 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தேர்வீதியில் ஒரு முறை உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிறப்பு தரிசன டிக்கெட்
பக்தர்கள் பொது வழியில், நான்கு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் காவடிகளுடன் வந்தும், தரிசனம் செய்தனர்.இதுதவிர 25, 100 மற்றும் 150 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசிக்க முடிந்தது.