வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: ராஜஸ்தானில், பட்டப்பகலில் தையல் தொழிலாளி தலையை துண்டித்து சமூக வலை தளங்களில் வீடியோவாக வெளியிட்ட கொடூர சம்பத்தால் ராஜஸ்தான் முழுவதும் பற்றம் நிலவுகிறது..
ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டம் மால்டா என்ற நகரில், ஜவுளிக்கடைக்குள் அத்துமீறி புகுந்த இரு மர்ம நபர்கள், அங்கு வேலை செய்து கொண்டிருந்த இளைஞரை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து தலையை துண்டித்தனர். இதன் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட இளைஞர் கன்ஹையா லால் என்பதும், அப்பகுதி ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த தையல் தொழிலாளி என்பதும், சர்ச்சையில் சிக்கியுள்ள பா.ஜ., செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால், அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மிரட்டல் வீடியோ வெளியிட்ட கொலையாளிகள்
இளைஞரை கொடூரமாக கொன்ற கொலையாளிகள் மிரட்டல் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அதில் யாரேனும் நுபுர் சர்மாவிற்கு ஆதரவு அளித்தால் அவர்களுக்கும் இதே நிலைதான் என எச்சரிக்கும் விதமாக அந்த் வீடியோவில் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் காட்டுத்தீயாக பரவிய நிலையில், கடையடைப்பு , வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற, வன்முறை சம்பவங்களும் நடந்ததால் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
கொலையாளிகள் கைது
இதற்கிடையே கொடூர கொலை சம்பவத்தை அரங்கேற்றி வீடியோ வெளியிட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகவும், இது ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் பாணியில் நடந்த பயங்கரவாத சம்பவம் என கூறப்பட்டு வருவதால், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் விசாரணை நடத்த ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.
அமைதி காக்க அரசு வேண்டுகோள்
கொடூர கொலைச் சம்பவம் மாநிலம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியதையடுத்து, மாநிலத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில காங்., முதல்வர் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.