சென்னை விமான நிலையத்தின், இரண்டு விமான ஓடு பாதைகளையும், ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது, ஓடுபாதையிலிருந்து விமானம் விரைவாக வெளியேற, இரண்டு புதிய 'ரேபிட் எக்ஸிட் டாக்ஸி வே' அமைக்கப்பட்டு வருகிறது.சென்னை விமான நிலையத்தில், பயணியர் பெரிய ரக விமானங்கள் தரையிறங்குவதற்கு வசதியாக, முதலாவது விமான ஓடு பாதையும், சிறிய ரக விமானங்கள் தரையிறங்குவதற்கு வசதியாக, இரண்டாவது விமான ஓடுபாதையும் அமைந்துள்ளன.தடைகள் அகற்றம்இரண்டாவது விமான ஓடுபாதையின், கொளப்பாக்கம் பகுதியில், விமானம் தரையிறங்குவதற்கு ஏதுவாக, அப்பகுதியில் உள்ள தடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த நிலையில், இரண்டு விமான ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் இயக்க விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்தது.இதற்கான முன்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கேற்ப, விமானங்கள் விரைவாக வெளியேற பாதைகள் அமைக்கும் பணி நடக்கிறது.இது குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:சென்னை விமான நிலையத்தில், இரண்டு விமான ஓடு பாதைகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி, பிரதான ஓடுபாதையை புறப்பாட்டிற்காகவும், இரண்டாவது ஓடு பாதையை தரையிறங்குதல் மற்றும் புறப்பாடு இரண்டிற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதிகாரிகளுக்கு பயிற்சிஇதற்காக, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, அதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கிடையே, ஓடுபாதைகளில் தரையிறங்கும் விமானம், அதிலிருந்து விரைவாக வெளியேறும் வகையில், ரேபிட் எக்ஸிட் டாக்ஸி வே அமைக்கும் பணி நடந்து வருகிறது.ரேபிட் எக்ஸிட் டாக்ஸி வே என்பது, டாக்ஸி வேக்கும், விமான ஓடுபாதைக்கும் இடையில் இருப்பது. தற்போது, பிரதான ஓடுபாதையில், ஒரு மணி நேரத்தில், 30க்கும் அதிகமான விமானங்கள் கையாளப்படுகின்றன.இரண்டு விமான ஓடுபாதைகள் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போதும், தரையிறங்கும் விமானம் உடனடியாக ஓடுபாதையை விட்டு வெளியேறும் போதும், 50 அல்லது அதற்கும் அதிகமான விமானங்கள், ஒரு மணி நேரத்தில் கையாள முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர்- -