நாகர்கோவில் : ''தமிழக கடற்பகுதியில் அச்சுறுத்தல் எதுவும் இல்லை'' என்று கடலோர பாதுகாப்பு மண்டல எஸ்.பி. சுந்தரவடிவேலு கூறினார்.
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் உள்ளூர் சட்டம் ஒழுங்கு போலீசாரும் இணைந்து நடத்திய "சாகர் கவாச்" என்னும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை ஆய்வு செய்தனர்.
இதனை ஆய்வு செய்த சுந்தரவடிவேலு கூறியதாவது: தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் அடங்கிய ராமநாதபுரம் மண்டலத்தில் 53 கடலோர பாதுகாப்பு குழும சோதனைச் சாவடிகள், 22 கடலோர காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.
![]()
|
பதினாறு அதிநவீன படகுகளும், நீரிலும் நிலத்திலும் இயங்கும் 15 படகுகளும் பாதுகாப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. சொந்தப் படகுகள் இல்லாத பகுதிகளில் மீனவர்களின் படகுகளை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தி வருகிறோம்.கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகளுக்காக 54 அதிநவீன படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடல் வழியாக ஊடுருவலை கண்காணிக்கவும் ஆபத்துக் காலங்களில் மீனவர்களுக்கு உதவியும் வருகிறோம்.
தெற்கு மண்டலத்தில் 350 முதல் 400 காவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு உதவும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 கிராமங்களில் இளைஞர்களைத் தேர்வு செய்து கிராம விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம். அவர்களின் தொழில் மேம்பாட்டிற்கு உதவுவதோடு சந்தேகப்படும் வகையில் யாரேனும் கடற்பகுதிகளில் ஊடுருவினால் அரசுக்கு தகவல் தரும் வகையில் அவர்களை பயிற்சி அளித்து வருகிறோம்.
தமிழகத்தின் கடற்பகுதியில் வழியாக எவ்விதமான அச்சுறுத்தலும் இல்லை. சுற்றுலா தலமாக விளங்கும் கடலோரப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடலோர பாதுகாப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும் கடற்கரை பகுதிகளை சுகாதாரமாக பேண வலியுறுத்தவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.