மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி, போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு திட்டமிட்டனர்.இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி விவசாய கூலி தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், கடந்த 27ம் தேதி அங்கு நடைபெற்ற நேரடி நெல் விதைப்பு பணியை விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தடுக்க முயன்றனர்.
அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட, 39 பேரை போலீசார் கைது செய்தனர். இந் நிலையில், மேலபருத்திக்குடி கிராமத்தில் மூன்று விவசாயிகள் நேற்று முன்தினம் தங்கள் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய முடிவு செய்தனர்.
மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் பரிந்துரையின் படி, அந்த பகுதியில், காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தொடர்ந்து அப்பகுதியில் ஏ.டி.எஸ்.பி., தங்கவேல் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து, காலை 9:00 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் தங்கள் வயல்களில் நேரடி நெல் விதைப்பு செய்தனர். 144 தடை உத்தரவால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.