சிக்கன்.. வழக்கம் போல் இல்லாம, கொஞ்சம் வித்தியாசமா, அதேநேரத்துல ஈசியா சமைக்கணும் என நினைக்கறீங்களா? அப்போ பெப்பர் சிக்கன் செஞ்சு சமாளிங்க. எந்த ரிஸ்க்கும் இல்லாம சீக்கிரமாக சமைச்சுடலாம். அதுவும் ஹோட்டலில் கிடைக்கக்கூடிய ஸ்டைலில்...
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
சோம்பு - 1/4 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1/4 டீஸ்பூன்
குருமிளகுத்தூள் - 1 1/4 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் - தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 3 கொத்து
கொத்தமல்லி இலை - சிறிதளவு
![]()
|
எப்படி செய்வது?
முதலில் அளவாக உப்பு சேர்த்து சிக்கனை தனியாக வேக வைத்து (முக்கால் வேக்காட்டில்) எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், சோம்பு, பட்டை, கிராம்பு போடவும். பின், கறிவேப்பிலை, பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும்.
நன்றாக வதங்கியவுடன் சிக்கன், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்க்கவும். அரை டம்ளர் சிக்கன் வேகவைத்த அல்லது சாதாரண தண்ணீரை சேர்த்து 3 நிமிடங்கள் மீண்டும் வேக வைக்கவும். தண்ணீர் வற்றியவுடன், குருமிளகு தூள், சிறிது சிக்கன் வேகவைத்த அல்லது சாதாரண தண்ணீரை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் மீண்டும் வேக விட்டால், கிரேவி பதத்தில் வந்துவிடும்.
பின், உப்பு, காரத்தை சரிபார்த்துவிட்டு அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்ளவும். அதில், தேங்காய் எண்ணெய் ஊற்றி, கொத்தமல்லி இலையை தூவி, தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்துப் பார்த்தால்... டேஸ்டியான, கலர்புல்லான பெப்பர் சிக்கன் ரெடி. மிளகாய் தூள், மல்லித்தூளுக்கு பதிலாக சிக்கன் மசாலாவை சேர்த்தால் சுவை, இன்னும் தூக்கலாக இருக்கும்.